உடுப்பி "எஸ்.பி".. செம ஸ்டிரிக்ட் போலீஸ்.. தேசிய பாஜகவின் "டிரம்ப்-கார்ட்".. யார் இந்த அண்ணாமலை?
சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தற்போது தமிழ்நாடு பாஜகவின் தலைவராகி இருக்கிறார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், தற்போது தமிழ்நாடு பாஜகவை வழி நடத்த உள்ளார்.
Recommended Video
கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் இருக்கும் சொக்கம்ப்பட்டியில் பிறந்தவர் அண்ணாமலை. 37 வயதே ஆகும் இவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணி புரிந்து வந்தவர். தமிழ்நாட்டில்தான் இவர் பிறந்து வளர்ந்தார்.
இளம் வயதில் இருந்தே ஆட்சி பணியிலும், அரசியலிலும் ஆர்வம் கொண்ட இவர் கோவை பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரியில் படிக்கும்போதே தீவிரமாக இந்திய ஆட்சி பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வந்தார்.

தயார்
அதன்பின் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மேல் படிப்பை முடித்துவிட்டு, நேராக யுபிஎஸ்சி தேர்வு எழுத சென்றார். 2011ல் இவர் யுபிஎஸ்சி தேர்வில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பயிற்சிக்கு பின் இவர் கர்நாடக மாநில அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2013ல் கர்நாடகாவின் உடுப்பியில் இவர் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

எஸ்பி
2013ல் இவர் பணிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்தே மிக அதிக அளவில் கவனிக்கப்பட்டார். கர்நாடக மக்களால் சிங்கம் அண்ணாமலை என்று அழைக்கப்பட்டார். மிகவும் ஸ்டிரிக்ட் அதிகாரி, கண்டிப்பானவர் என்று பார்க்கப்பட்டார். ரவுடியிசம், கலவரத்திற்கு எதிரானவர். முக்கியமாக நேரடியாக களத்தில் இறங்கி ஆக்சன் எடுப்பது, பிரச்சனை நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று சினிமாவில் வருவது போல கைது செய்வது, சவால் விடுவது என்று அண்ணாமலை கர்நாடகாவில் மிகவும் பிரபலமான அதிகாரியாக இருந்தார்.

பாஜக
உடுப்பியில் நடந்த சில மத மோதல்களை திறம்பட கையாண்டவர். அதேபோல் கர்நாடக பாஜக தலைவர்களின் குட்புக்கில் கூட இவர் இருந்தார். உடுப்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாஜக தலைவர்களிடம் நட்பாக பழகினார். பல்வேறு இந்து மத தலைவர்கள், சாமியார்களை நேரில் சந்தித்துள்ளார், தனது மத நம்பிக்கையையும் அதிகாரியாக இருக்கும் போது அண்ணாமலை பொதுவில் வெளிப்படுத்திய தயங்கியது இல்லை.

கர்நாடகா
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்த கர்நாடகாவின் சிடி ரவிக்கு மிகவும் நெருக்கமானவராக இவர் பார்க்கப்பட்டார். அப்போதே இவர் பாஜகவில் இணைவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. எடியூரப்பா ஆட்சியின் போது இவர் 2018ல் பெங்களூரின் தெற்கு பகுதிக்கு டிசிபியாக பதவி உயர்வு பெற்றார். பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த அண்ணாமலை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலரிடமும் நட்பு பாராட்டினார்.

கர்நாடக பாஜக அரசியல்
நான் ஒரு ப்ரவுட் கன்னடிகா என்று சொல்லும் அளவிற்கு இவர் கர்நாடக மக்கள் இடையே பிரபலமாக இருந்தார். அரசியலில் இணைவதற்காக 2019ல் ஐபிஎஸ் பதவியை துறந்த அண்ணாமலை, தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் சில நாட்கள் ஆடு வளர்ப்பு உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொண்டவர், பின்னர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

தமிழ்நாடு
தமிழ்நாடு பாஜகவில் இணைந்த பின் இவருக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதோடு அரவக்குறிச்சி தேர்தலில் நிர்வாகப்பட்டார். தமிழ்நாடு பாஜகவின் முகமாக தொடக்கத்தில் இருந்தே அண்ணாமலை தேசிய தலைமை மூலம் முன் நிறுத்தப்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் குட் புக்கிலும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்படி
அரவக்குறிச்சி தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட இவர் மீது தேசிய தலைமை தொடர் நம்பிக்கை வைத்து இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக அதிரடி காட்டியவர், தமிழ்நாடு பாஜக தலைவராக எப்படி செயல்பட போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications