அதிகரிக்கும் கொரோனா.. Work from Home உண்டா? கிடையாதா? முன்னணி ஐடி நிறுவனங்கள் கூறுவது என்ன?
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் Work From Home உண்டா? கிடையாதா? என்பது பற்றி ஸ்னாப்சிஸ், டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.
இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா பரவ துவங்கியது. 3 அலைகளாக மக்களை கொரோனா பாதித்தது. இதில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாககவும் இறந்தனர்.
இதையடுத்து இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிசெய்ய வாய்ப்பு வழங்கியது. இதில் முக்கிய இடத்தில் ஐடி நிறுவனங்கள் உள்ளன.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா! கவுன்சிலர்களுக்கு உத்தரவிட்ட மேயர் பிரியா ராஜன்! என்னாச்சி?
அலுவலகம் அழைத்த நிறுவனங்கள்
2020ல் துவங்கிய Work From Home பணி முறை இன்னும் பல நிறுவனங்களில் தொடர்கிறது. இருப்பினும் கடந்த 6 மாதமாக கொரோனா பரவல் குறைந்ததால் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து பணி செய்யும்படி பணித்ததது. இதை ஏற்று அந்த ஊழியர்கள் அலுவலகம் சென்று பணி செய்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒரேநாளில் 16,103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 31 பேர் இறந்திருந்தனர். பாதிப்பானது நேற்றைய தினத்தை விட குறைவு எனினும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 568 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்த நியைில் இன்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 4 கோடியே 5 லட்சத்து 2 ஆயிரத்து 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 199 பேர் பலியாகி உள்ளனர்.
நிறுவனங்களின் திட்டம்
தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் அலுவலகம் அழைத்த ஐடி நிறுவனங்கள் மீண்டும் வீட்டில் இருந்தே பணி செய்ய ஊழியர்களை பணித்துள்ளது. மேலும் கொரோனா பரவலால் பல நிறுவனங்கள் புதிய திட்டத்தை வகுத்துள்ளன. அதுதொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
வீட்டில் இருந்தே பணி
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கும் Synopsys தனது ஊழியர்களை கடந்த மாதம் அலுவலகம் வந்து வேலை செய்யும்படி அறிவுறுத்திய நிலையில் தற்போது ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மீண்டும் வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் Paytm நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய கூறியுள்ளது. இதற்கான அறிவிப்பை நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா கூறினார்.
டிசிஎஸ் நிலைப்பாடு என்ன?
இதேபோல் மேஜர் ஐடி நிறுவனங்களாக உள்ள டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தை பொறுத்தமட்டில் 5 சதவீதம் ஊழியர்கள் அதாவது சீனியர் எக்சிக்யூட்டிவ்ஸ் மட்டுமே அலுவலம் வந்து பணி செய்ய கூறப்பட்டுள்ளது. மேலும் Occasional Operating Zones (OOZs) மற்றும் Hot desks அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 X 25 எனும் கொள்கை பின்பற்றப்படுகிறது. இதன்மூலம் பணியாளர்களில் 25 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டும் அலுவலகம் செல்ல வேண்டும்.மேலும் அசோசியேட்ஸ் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பிற நிறுவனங்களில் அமர்ந்து பணி செய்ய முடியும்.
இன்போசிஸ் நிலைப்பாடு என்ன?
இன்போசிஸ் நிறுவனத்தின் பணி முறை குறித்து அதன் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் கூறுகையில், ‛‛ஒவ்வொரு காலாண்டிலும் பணி முறை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தற்போது 5 சதவீதத்தினர் மட்டுமே நிறுவனத்தில் இருந்து பணி செய்கின்றனர். இவர்கள் சீனியர் எக்ஸ்ஸிக்யூட்டிவ்வாக உள்ளனர். மீதமுள்ள 95 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர்'' என்றார்.
எச்சிஎல் நிறுவனம்
எச்சிஎல் நிறுவனம் சார்பில் ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்து தான் பணி செய்கின்றனர். இதுபற்றி நிறுவனம் சார்பில் ஊழியர்களின் பாதுகாப்பே மிக முக்கியமானது. இதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். தற்போது நிறுவனத்தில் பணி நன்றாக செல்கிறது. எந்த இடையூறும் இல்லை. இதனால் வீட்டில் இருந்தே பணி முறை தொடர்கிறது என கூறப்பட்டுள்ளது.