தமிழக மக்களே எச்சரிக்கையுடன் இருங்கள்.. அத்தியாவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம்..ஆளுநர் அறிவுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அத்தியாவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் ஆளுநர் ஆர். என். ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே கனமழை பெய்து வந்தது.
இதற்கிடைய தமிழ்நாட்டில் சென்னை உட்பட வடமாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளையும் நாளை மறுநாளும் அதிக மழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பிலும் சென்னை மாநகராட்சி சார்பிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த மூன்று குழுவினர் சென்னை விரைந்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அத்தியாவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் ஆளுநர் ஆர். என். ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசியமற்ற நடமாட்டம், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் " என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications