தமிழ்நாட்டில் 30 மணி நேரம் நீடித்த முழு ஊரடங்கு நிறைவடைந்தது... அதிகாலை முதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கிய ஊரடங்கு சுமார் 30 மணி நேரத்திற்குப் பிறகு இன்று அதிகாலை நிறைவடைந்தது..
இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, நேற்று 15 ஆயிரத்தைத் தாண்டியது.

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,81,988 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்பு 82ஆகப் பதிவாகியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை இரவு 10 மணிக்குத் தமிழகத்தில் தொடங்கிய முழு ஊரடங்கு சுமார் 30 மணி நேரம் மாநிலத்தில் அமலில் இருந்தது.
முழு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் இறைச்சி மற்றும் மீன் கடைகள், காய்கறி கடைகள், டாஸ்மாக் கடைகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி இல்லை. முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அதேநேரம் ஊரடங்கு காலத்தில் பால் வினியோகம், மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் மாநிலத்தில் சுமார் 30 மணி நேரம் நீடித்த முழு ஊரடங்கு இன்று அதிகாலை நிறைவடைந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம்போல கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இயக்கப்பட்டன. காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications