தாண்டிக் குதித்த ‘தலை’: 84 புள்ளிகள்.. அமித்ஷாவுக்கு கைமாறிய ரிப்போர்ட்.. கமலாலயத்தில் நடந்தது என்ன?
சென்னை : சென்னை கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசித்துள்ளார். மேலும், தமிழக காவல்துறை அதிகாரிகள் பற்றி ஒரு முக்கியமான ஃபைலையும் தமிழக பாஜகவினர், அமித்ஷாவிடம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தல் குறித்து பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இதர கட்சிகளை சேர்ப்பது குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கமலாலயத்தில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

அமித்ஷாவின் தமிழக விசிட்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார். பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-ம் ஆண்டு விழாவில் உள்துறை அமித்ஷா கலந்து கொண்டார். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர். ஓ.பன்னீர்செல்வமும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். எனினும் இருவரும் மரியாதை நிமித்தமாக கைகுலுக்கிக் கொண்டதோடு சரி.

தாண்டிக் குதித்த தலை - சண்முகம்
தொடர்ந்து பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்திற்கு சென்றார் அமித்ஷா. அங்கு பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக அலுவலகத்திற்கு வந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சமீபத்தில் சிறிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் நட்டாவை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று ஏசி சண்முகம் அமித்ஷாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும், கூட்டணி, சீட் பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

84 முக்கிய புள்ளிகள்
இதையடுத்து அமித்ஷா தலைமையில் பாஜக மையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, எச்.ராஜா உள்ளிட்ட 84 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூடத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றரை மணி நேரம்
லோக்சபா தேர்தல் வியூகம் குறித்தும், அதிமுக கூட்டணியில் பாஜக குறைந்தபட்சம் எத்தனை சீட்களை கேட்டுப் பெற வேண்டும் என்பது குறித்தும் மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் எத்தனை இடங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம், எந்தெந்த கட்சிகள் நம்முடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கின்றன, யாரைச் சேர்த்தால் வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

பூத் கமிட்டி
தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது எனவும் அதனை பாஜக நிரப்ப வேண்டும் எனவும் பாஜக அடிப்படை உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க உழைக்க வேண்டும், பூத் கமிட்டியை பலப்படுத்துவதற்கான வியூகங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், பாஜக கடந்த சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றும் பாஜக நிர்வாகிகள் மத்தியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

பாஜகவினர் கொடுத்த ஃபைல்
மேலும், தமிழக அரசு, பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளதாகவும் அதுகுறித்த லிஸ்ட், தமிழக காவல்துறை அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல நடந்து கொள்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு அதுபற்றிய விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஹேப்பி
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், கமலாலயத்தில் இருந்து காரில் சென்னை விமான நிலையம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். பாஜகவினரின் சமீபத்திய செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசிய அமித்ஷா, நம்பிக்கை அளிக்கும் வகையில் பல அட்வைஸ்களையும் கூறி இருப்பதால், தமிழக பாஜக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications