என்னிடம் அதிகாரமிருந்தால்..முதல் நாள் ஆணை! ஆர்ப்பாட்டத்தில் அன்புமணிக்கு வந்த கோபம்! என்ன பேசினார்?
சென்னை : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடை கூட மூடப்படவில்லை , மது ஒழிப்பு தொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறியதை திமுக நிறைவேற்றவில்லை எனவும், என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாளில் போதைப் பொருளுக்கு முடிவு கட்டி விடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
300க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது , கஞ்சா , குட்கா , போதை மருந்து , போதை மாத்திரை உள்ளிட்ட அனைத்து வகை போதைப் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

அன்புமணி ராமதாஸ்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "போதைப் பொருள் பிரச்சனை என்பது இளைஞர்கள் , அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சனை. 43 ஆண்டுகால பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ராமதாஸ் மது , புகையிலை , குட்கா , ஆன்லைன் ரம்மி உட்பட மக்கள் பாதிக்கும் பிரச்சனைக்கு எதிராக போராட எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏழே முக்கால் கோடி பேரில் 50லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமை. பிற மாநிலங்களில் இல்லாத போதைப் பொருட்கள் இங்கு விற்பனையாகிறது.

போதைப் பழக்கம்
போதைப் பழக்கத்தால் தமிழகத்தில் குடும்பத்தில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவையே சுமக்க வேண்டிய தூண் போன்ற இளைஞர்கள் , இந்தியாவிற்கு சுமையாகி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது , இது முதல்கட்ட போராட்டம் , அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் தீவிரமடையும். கஞ்சா , அபின் , காக்கேன் ஹெராயின் , எல்எஸ்டி போன்றவை பள்ளி , கல்லூரி வாசலிலே விற்பனை நடைபெறுகிறது.

போதைப் பொருள் விற்பனை
பேப்பர் வடிவில் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது , மாணவர்கள் நாவில் அதை வைத்துக் கொள்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி தலைவராகி ஸ்டாலினை சந்தித்தபோது எனது முதல் கோரிக்கை போதைப் பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் 10 விழுக்காடு மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு 9 விழுக்காடு இந்த ஆண்டு 1 விழுக்காடு அதிகரிப்பு.

2 நாளில் முடிவு
போதை பழக்கமுள்ள 27 விழுக்காடு மாணவர்கள் எளிதில் கிடைப்பதால் அடிமையானதாக கூறியுள்ளனர். ஐஐடி , நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் , NIFT , மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதைப் பொருட்கள் எளிதில் கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாளில் போதைப் பொருளுக்கு முடிவு கட்டி விடுவேன்.
முதல நாள் ஆணை , அடுத்தநாள் நடவடிக்கை எடுப்பேன்.

போராட்டம் வெடிக்கும்
போதை விற்பனை நடைபெறும் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்வேன். தமிழகத்தில் ஒரு மாதத்தில் 80ஆயிரம் கிலோ கஞ்சா விற்பனையாவதாக காவல்துறை தரப்பிலிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. போதை பொருள் ஒழிப்பு பணியில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் , முற்றிலுமாக போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும். மாணவர்கள் இளைஞர்கள் மீது பாதக போல பிற கட்சிகளுக்கு அக்கறை இல்லை. தமிழக அரசு போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களை கொண்டு எங்களது அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும்" என பேசினார்.












Click it and Unblock the Notifications