தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக ஆட்சி! உற்சாக டானிக் கொடுத்த அன்புமணி! பொதுக்குழு சுவாரஸ்யம்!
சென்னை: தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி அமைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்று வரும் பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் பேசிய அவர், தனது விருப்பத்தை இவ்வாறு நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
4 ரூபாய் போதாது என்றேன்.. கருணாநிதி 10 ரூபாய் கொடுத்தார்.. நன்றியுடன் நினைவுக்கூறும் குமரி அனந்தன்!
ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு பாமக ஆட்சி என்ற கோஷத்தை முன் வைத்து மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் அக்கட்சி தேர்தலை எதிர்கொண்டதும் பிறகு காலப்போக்கில் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானதும் குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு பொதுக்குழு
பட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் புத்தாண்டு பொதுக்குழு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னை சிவானந்தா சாலையில் உள்ள உள் அரங்கம் ஒன்றில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அன்புமணிக்கு தலைவர் பதவியோ அல்லது செயல் தலைவர் பதவியோ கொடுத்து புரோமோஷன் செய்ய வேண்டும் என பலரும் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அன்புமணி பேச்சு
இதனிடையே புத்தாண்டு பொதுக்குழுவில் மைக் பிடித்த அன்புமணி ராமதாஸின் பேச்சு, நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களுக்கு புதுதெம்பு கொடுக்கும் வகையில் இருந்திருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இப்போது எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காண்கிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக ஆட்சி அமைய வேண்டும் எனப் பேசி கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாக டானிக் வழங்கியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
ஆசை இல்லை
மேலும், முதலமைச்சர் பதவி மீது ஆசையோ, வெறியோ தனக்கில்லை என்றும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே தமது குறிக்கோள் எனவும் அன்புமணி தெரிவித்திருக்கிறார். ஒரே ஒரு முறை தமிழகத்தை ஆளும் அதிகாரம் பாமகவிடம் கிடைத்தால், நாட்டின் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்ட முடியும் எனக் கூறியிருக்கிறார். தமிழகத்தை பாமக ஆள வேண்டும் என்பதை இலக்காக கொண்டு நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சிப்பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பாமக தனித்து
பாமக ஆட்சி என்ற முழக்கத்தின் மூலம் திமுகவுடன் தாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம் என்பதை சூசகமாக தெரிவித்துவிட்டார் அன்புமணி. இதனிடையே அன்புமணி ராமதாஸின் உணர்ச்சி பிழம்பான பேச்சுக்கு அரங்கத்தில் பலத்த கரவொலி எழுந்ததன் மூலம், பாமக தனித்து தேர்தலில் களம் காண வேண்டும் என்பதையும் பாமக தலைமையில் தான் கூட்டணி உருவாக வேண்டும் என்பதையும் கட்சி மேலிடத்துக்கு நிர்வாகிகள் உணர்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.