தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி!
சென்னை: தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் தான் அண்ணாமலை போட்டியிடவில்லை என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். தேர்தலை கண்டு திமுகவுக்கு எந்த பயமும் இல்லை என்று கூறிய கனிமொழி, தாங்கள் நம்பிக்கையுடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இது பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகியது.

கோவையில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் அண்ணாமலை போட்டியிடவில்லை என்று தெரிகிறது. அதேபோல் தமிழக பாஜக அனுப்பிய பரிந்துரை பட்டியலில் கூட அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அண்ணாமலையும் உறுதி செய்தார்.
ஏற்கனவே 2021 சட்டசபைத் தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால் இம்முறையும் தோல்வி அடைந்தால், அது தன்னுடைய இமேஜிற்கு சிக்கலாகும் என்று அண்ணாமலை கருதியதாக தெரிகிறது. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதால் அண்ணாமலை மாநில அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக பேசப்படுகிறது.
இருந்தாலும் அண்ணாமலை பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, பின்னர் திடீரென டெல்லி புறப்பட்டார். இதற்கான பின்னணி தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அவருக்கு தேசிய அளவில் பதவி அளிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது தொடர்பாக கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கனிமொழி, திமுக ஏன் தேர்தலை கண்டு பயப்பட வேண்டாம்.. தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் தான் அண்ணாமலை தேர்தலிலேயே நிற்கவில்லை. திமுக நம்பிக்கையோடு வெற்றி எங்களுக்கு என்று பணியாற்றி வருகிறோம். அவர்களுக்கு தான் பயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications