காருக்குள் ஒரு மணி நேரம்! மோடியிடம் பட்டியலை நீட்டிய அண்ணாமலை! செய்தியாளர் சந்திப்பில் சொன்னது என்ன?
சென்னை : திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விட்டு சாலை மார்க்கமாக மதுரை சென்ற நிலையில், அந்த பயணத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமருடன் பயணித்த நிலையில் பிரதமரிடம் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் அண்ணாமலை.
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவ மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள், பட்டங்கள், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கினர். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் ஓபிஎஸ் அணியினரும் வரவேற்றனர். பின்னர் அம்பாத்துறையில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

காரில் பயணம்
பின்னர் கார் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் நிகழ்ச்சி முடிந்த பிறகு மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டு சுமார் 58 கிலோ மீட்டர் தூரம் காரிலேயே பயணித்தார் பிரதமர். பிரதமரின் சாலை பயணத்தின் போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை சாலையோரங்களில் ஏராளமான மக்கள் கொட்டும் மழையிலும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அடுக்கிய அண்ணாமலை
பிரதமரின் கார் பயணத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பயணித்தனர். கார் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்ணாமலை பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக செய்தியாளர்களிடம் அவரே கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை ஊக்கமளிக்கிறது. தலைவர்களை உற்சாகமூட்டிவிட்டு சென்றுருக்கிறார் அமித்ஷா. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம்" என்றார்.

பிரதமர் மகிழ்ச்சி
மேலும் பயணம் செய்த மத்திய இணையமைச்சர் முருகன், முன்னாள் அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தமிழகத்தில் நடைபெற்று வரும் விவகாரங்கள் மற்றும் பாஜகவின் வளர்ச்சி, அடுத்தகட்ட திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொது மக்களின் வரவேற்பு காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

பாக்கியம்
இந்த நிலையில் பிரதமருடன் காரில் பயணித்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை தி நகரில் கமலாலயத்தில் அமித்ஷாவுடன் ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஒரு நாட்டின் பிரதமருடன் காரில் ஒரு மணி நேரம் பயணம் செய்தது மறக்க முடியாது. இந்த கார் பயணத்தின் போது பிரதமருடன் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டதாகவும் தமிழக மக்களின் நலம் சார்ந்த விஷயங்கள் குறித்து எடுத்துரைத்ததாக கூறினார். மேலும் பிரதமர் தமிழக மக்களின் அன்பால் மகிழ்ந்து போனதாகவும் காசிக்கு வரும் தமிழகத்தின் முதல் குழுவை தானே வரவேற்பேன் எனக் கூறியதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications