தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு.. விவரம்
சென்னை: தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகை, திருப்பத்தூர், விழுப்புரம், கோவை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்ட ஆட்சியர்கள் வேறு பொறுப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 9ம் தேதி 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அப்போது மதுரை மாநகராட்சி ஆணையராக டாக்டர்.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி ஆணையராக திரு.கிருஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டார். இதேபோல் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார் மற்றும் நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்னு சந்திரன் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சுங்காரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
என்ன பொறுப்பு
இந்நிலையில் இன்று (13ம் தேதி) ஒரே நாளில் நாகை, திருப்பத்தூர், விழுப்புரம், கோவை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்ட ஆட்சி தலைவர்கள் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகை ஆட்சியர் பிரவின் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள், பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை
விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், நில நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக அன்ஷுல் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் லட்சுமி ப்ரியா தொழில்நுட்ப கல்வி இயக்குநராக மாற்றப்பட்டிருக்கிறார். பேரூராட்சிகள் ஆணையராக செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமிக்கப்பட்டுள்ளார். மரிய பல்லவி பல்தேவ், பிரியங்கா ஆகியோர் பெண்களின் வளர்ச்சிக்கான தமிழ்நாடு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தட்சணா மூர்த்தி தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கோவிந்தராவ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிண்டன் ஐஏஏஸ் தமிழ்நாடு பாடல்நூல் விநியோகம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அஜய் யாதவ் சிப்காட் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தித்துறை
பிருந்தா தேவி- பட்டுவளர்ப்புத்துறை இயக்குநராக நியமனம், வள்ளலார்- விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய வணிக கமிஷனர் ஆக நியமனம்
சரவண வேல்ராஜ்- நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம். டி.ஜி.வினய்- சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநராக நியமனம். ஜெயகாந்தன்- சுங்கத்துறை கமிஷனராக நியமனம். ரத்னா- சமூக நலத்துறை இயக்குநராக மாற்றம். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநராக அமுதவள்ளி நியமனம். கந்தசாமி - பால் உற்பத்தித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஸ்கர பாண்டியன்- மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.