பாஜக போட்ட அடுத்த குண்டு.. தமிழகத்தில் இன்னொரு தலைவர் கைதாவார்.. கலக்கத்தில் திமுக?
இன்னொரு தலைவர் கைதாவார் என்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது
சென்னை: தமிழகத்தில் இன்னொரு தலைவர் கைதாவது குறித்து பாஜக தொடர்ந்து சொல்லி கொண்டே இருப்பது, பெரிய கலக்கத்தை அரசியலில் ஏற்படுத்தி உள்ளது.
மோடியின் முதல் ஆட்சியில் இருந்தே ஊழலுக்கு எதிரான போக்கு என்பதை வலியுறுத்தி வருகிறது. இப்போதைய 2-வது முறை ஆட்சியில் ஊழலுக்கு எதிரான செயலை கையில் எடுத்து வருகிறது.
அதன்படி, ஊழல் செய்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைதாகி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் கட்டம் கட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இது ஒருவகையில் அரசியல் பழிவாங்கும் போக்காகவும் பார்க்கப்படுகிறது.
ஊழல்வாதிகள்
ஊழல்வாதிகள் சிறை செல்வார்கள் என்று தமிழகத்தில் இதை அடிக்கடி சொல்லி வந்தது எச்.ராஜாதான். கனிமொழி, ஆ.ராசா, ப.சிதம்பரம் பெயர்களை எச்.ராஜா அடிக்கடி சொன்னதுடன், சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடியில் திரும்பவும் எம்பி தேர்தல் வரும் என்றும் சொன்னார்.
கூட்டணி
இதையடுத்துதான் ப.சிதம்பரம் கைது நடந்து முடிந்தது. சில தினங்களுக்கு முன்புகூட "இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ஊழல் செய்திருக்கிறார்... அவர் தான் அடுத்த கைது" என்று ஒரு பேட்டியில் சொன்னார். இதையடுத்து அந்த நபர் யாராக இருக்ககூடும் என்றும், கண்டிப்பாக அது திமுக அல்லது கூட்டணி கட்சி சம்பந்தப்பட்டவராக இருக்கக்கூடும் என்றும் கருத்துக்கள், யூகங்கள் பலமாக எழுந்தன.
அஸ்வின்குமார்
அந்த பேச்சே இன்னும் ஓயாத நிலையில், திரும்பவும் கைது நடவடிக்கை பற்றி பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா தான் இதை பற்றி சொல்லி உள்ளார். ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
முக்கிய புள்ளி
அப்போது "இந்தியா முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் தொடர்பு உள்ளவர்கள். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ப.சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும் விரைவில் கைது செய்யப்படுவார்'' என்று சொன்னார். பாஜகவின் முக்கிய புள்ளியே இப்படி சொல்லி உள்ளது தமிழக அரசியல் பெரிய பரபரப்பை தந்துள்ளது. கார்த்திக் சிதம்பரமா, கனிமொழியா, ஆ.ராசா, பாரிவேந்தரா என்று தெரியவில்லை. இருந்தாலும் திமுக தரப்பில் இது புளியை கரைப்பதாகவே தெரிகிறது.
திமுக எம்பிக்கள்
ஏராளமான எம்பிக்களுடன் டெல்லியில் கெத்தாக திமுக உட்கார்ந்திருப்பதே பாஜக கண்ணை உறுத்தி வருவதாகவும், திமுகவை டேமேஜ் செய்ய அக்கட்சி எம்பிக்களின் பழைய புகார்கள், ஊழல்கள், குற்றச்சாட்டுகள் குறித்த ரிப்போர்ட்களை ரெடி செய்து தருமாறு பாஜக தலைமை கேட்டதாகவும் தகவல்களும் வந்தன. இந்நிலையில்,தமிழக அரசியல்வாதி கைதாவார் என்று பாஜகவே சொல்லி உள்ளது திமுக தரப்புக்கு கிலியை தருவதாக உள்ளதாம்!