"கருவாடு" மீனாகிறதா.. திமுகவை சூழ்கிறது "நெருப்பு".. பாஜக பாச்சா பலிக்குதோ.. நேரம் நெருங்கிடுச்சே..!
பத்திரிகையாளர் மணி ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் திமுக குறித்து கருத்து கூறியுள்ளார்
சென்னை: ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக திமுக இன்னும் தீவிரம் எடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஒரு பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.. ஒருபக்கம் ரெய்டுகள், மறுபக்கம் பெட்ரோல் குண்டுவீச்சுகள் என பரபரப்புகள் தொற்றிக் கொண்டுள்ளன.
மற்றொருபக்கம், ஆர்எஸ்எஸ் 2ம் தேதி பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ளது.. இந்த பேரணிக்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆர்எஸ்எஸ் கலவரங்கள் செய்ததில்லை.. பேரணிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது.. கொந்தளிக்கும் பொன்னார்!
பளீர் பாயிண்ட்கள்
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மணி, ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், தமிழகத்தில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.. மேலும், ஃபிரண்ட் ஆப் இந்தியா ரெய்டுகள், நட்டா வருகை, பெட்ரோல் குண்டு வீச்சு, இப்படி எல்லாமே ஒரே சமயத்தில் அடுத்தடுத்து நடந்துள்ளதே.. ஒன்றுக்கொன்று ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என்பன உட்பட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.. அவைகளுக்கு மணி நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவைதான்:
100+ பேர் யார்
"நட்டா வருகைக்கும் பெட்ரோல் குண்டு வீச்சுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.. காரணம், நட்டாவின் வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.. பிஎப்ஐ ரெய்டின் தொடர்ச்சியாககூட இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம். பிஎப்ஐ செயல்பாடு ஒன்றும் கடந்த காலங்களில் மெச்சத்தகுந்த மாதிரி கிடையாது... 15 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று, சுமார் 100 பேர் தடுப்பு காவலில் எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.. கேரளாவில் பிஎப்ஐ ரெய்டுக்கு எதிராக நடைபெற்ற பந்த்தில், வன்முறை தலைவிரித்தாடி உள்ளது..
2 சர்க்கார்
கேரள உயர்நீதிமன்றம் அந்த வன்முறையையையும், பிஎப்ஐயையும் கடுமையாக கண்டித்தும் உள்ளது.. இதற்கு பிறகு, பினராயி விஜயன் அறிக்கை விடுத்து, பிஎப்ஐ-க்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.. இங்கே நம்ம ஆளுநர் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் 5 மாதங்களுக்கு முன்பு பேசும்போது, பிஎப்ஐ-தடை செய்ய வேண்டும் என்கிறார்.. ஆனால் இவர் யாரை தடை செய்ய சொல்கிறார்? யாருக்கு கோரிக்கை வைக்கிறார் என்பது விளங்கவில்லை.. மத்திய சர்க்காரை தடை செய்யலாம்.. மாநில சர்க்காரை தடை செய்யலாம்.. ஆனால், இவர் மாநில அரசின் ஆளுநராக இருந்து கொண்டு, பிஎப்ஐ தடை செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கிறாரா? அல்லது மோடி அரசுக்கு கோரிக்கை விடுக்கிறாரா? இதை ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும்.
இரும்புக்கரம்
அதுமட்டுமல்லாமல், எந்த ஒரு அமைப்பையுமே இந்த காலகட்டத்தில் தடை செய்ய வேண்டும் கோருவதே அபத்தமான கோரிக்கை.. காரணம் ஒரு கருத்தை நீங்கள் எப்போதுமே தடை செய்ய முடியாது.. ஒருவேளை தவறு செய்பவர்கள், எந்த ஒரு இயக்கத்தில் இருந்தாலும், அவர்களை தூக்குங்க.. ஆனால், இயக்கத்தை தடை செய்ய கோரக்கூடாது.. இங்கே பெட்ரோல் குண்டு வீசியது யார்? வெடிகுண்டு வீச்சுக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜக பிரமுகர்கள்.. அப்படின்னா இதை செய்பவர்கள் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தால், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்..
பெருநாசம்
வன்முறை என்பது எந்த தரப்பில் நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.. 10 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்று தகவல்கள் வருகிறது.. வன்முறை என்பது இருமுனைகத்தி.. இத்தகைய சக்திகளை அரசு, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.. 2024 தேர்தலுக்குள் இந்த அரசை சீர்குலைக்க வேண்டும், ஸ்தம்பிக்க வைக்க வேண்டும், சின்னாபின்னமாக்க வேண்டும், இந்த அரசுக்கு கெட்ட பெயர் தர வேண்டும் என்று அண்ணாமலையும், அவரது கட்சிக்காரர்களும், ஆர்எஸ்எஸ்ஸும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்.. 50 இடங்களில் 2ம் தேதி ஊர்வலம் என்று எதுக்கு சொல்றாங்க.. நல்லா இருக்கிற ஊரை நாசம் செய்ய போறாங்க..
பாதி வயது
சிறுபான்மையினர் சமூகத்தில் உள்ள மதசார்பற்ற சக்திகள், மிகவும் நியாயமாக யோசிக்க கூடியவர்கள்.. 99 சதவீதம் அங்கிருப்பவர்கள் நியாயமாக யோசிக்கக்கூடிய தேசப்பற்று உடையவர்கள்தான்.. அவர்கள் இதுபோன்ற சக்திகள் தலைதூக்காமல் அவர்களும் பாதுகாக்க வேண்டும்.. அவர்களுக்கும் இந்த பொறுப்பு உள்ளது.. திமுக வீறு கொண்டு எழுந்தால் பாஜகவால் எதிர்கொள்ள முடியாது.. திமுக இன்றைக்கு கண்ணியமாக நடந்து கொள்வோம் என்று நினைக்கிறார்கள்.. ஆனால் அண்ணாமலை இதை விட மாட்டார் என்றே தோன்றுகிறது.. அண்ணாமலையின் அரசியல் அனுபவம், ஸ்டாலினின் அரசியல் அனுபவம் இரு மடங்கு பெரியது.. ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தில் பாதிதான் அண்ணாமலையின் வயசு..
அமளிதுமளி
தமிழ்நாட்டை அமளிதுமளியாக்கிவிட வேண்டும், 2025-ல் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது, இந்துராஷ்டிராவாக உருவாக்கிவிட வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்.. அவர்களின் பாச்சா பலிக்காத ஒரே இடமாக தமிழகம் இருக்கறது.. அதுக்காக ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதை தடுக்க முடியாது.. சட்டரீதியாக இயங்கக்கூடிய இயக்கம் அது.. தடை செய்யப்பட்ட இயக்கம் கிடையாது.. கடந்த காலங்களில் 3 முறை தடைசெய்யப்பட்டாலும், இப்போது வெளிப்படையாகவே இயங்கி வருகிறது.. ஊர்வலம் போக அனுமதி கேட்டால், அதை அரசால் மறுக்கவும் முடியாது.. கட்டுப்பாடுகளை வேண்டுமானால் விதிக்கலாம்..
கலைஞர்
ஆனால், ஆர்எஸ்எஸ் களத்தில் முறியடிக்க, திமுக இறங்கி வர வேண்டும்.. மாறாக, வெறும் அறிக்கைகள் இதற்கெல்லாம் போதாது.. பாஜகவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் திமுகவுக்குள் ஒரு குழப்பம் உள்ளதே தவிர, பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாகவே உள்ளது.. ஆனால், எதிர்ப்பின் வடிவம்தான் எது என்பதே தற்போதைய கேள்வி.. அதுக்காக, அதிகாரம் இருப்பதற்காக பாஜகவை பந்தாடவும் முடியாது.. பாஜகவை எதிர்க்காவிட்டால் அரசியல் செய்யவும் முடியாது.. இதை திமுகவும் உணராமல் இல்லை.. 73 வருடங்களில், திமுக சந்திக்காத பிரச்சனை இல்லை.. கலைஞர் சந்தித்த பிரச்சனைகளை, வேறு ஒருவர் யாராவது சந்தித்திருந்தால், அப்போதே அந்த நபர் இறந்திருப்பார்.. புதைத்த இடத்தில் புல் மட்டுமல்ல, மரமே இந்நேரம் நின்றிருக்கும்..
கருணாநிதி
அந்த அளவுக்கு கலைஞர் கடைசிவரை போராடி கொண்டிருந்தார். எமர்ஜென்சியே பார்த்த கட்சி திமுக.. ஆனால், எமர்ஜென்சியே சந்திக்காத சோதனையை திமுக இன்று சந்தித்து கொண்டுள்ளது.. எதிரியை எப்படி சமாளிப்பது என்பது தெளிவற்ற போக்கு திமுகவில் உள்ளது.. ஆர்எஸ்ஸை எதிர்கொள்ள நேரம் நெருங்கிவிட்டது.. விசிக இறங்கி போரிடுவதுபோல், இடதுசாரிகள் இறங்கி போரிடுவதுபோல், திமுகவும் இறங்கி போரிட்டாக வேண்டும்.. காந்தி பிறந்தநாளை முன்னிட்டு விசிக மனித சங்கிலிக்கு அழைப்பு விடுத்திருக்கும்போது, திமுகவும் அதில் கலந்து கொள்ள வேண்டும்.. ஆர்எஸ்எஸ் ஒரு இடத்தில் ஊர்வலம் நடத்தினால், திமுகவும் குறைந்தது 3 இடங்களிலாவது ஊர்வலம் எடுக்க வேண்டும்..
எமர்ஜென்ஸி
இதை செய்யாவிட்டால் பாஜகவை எதிர்க்க முடியாது.. ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால், திமுக களத்தில் இறங்கிதான் ஆக வேண்டும்.. அவசரப்பட்டு, அரிசி பானையை உடைச்சிட்டு உங்களை நிற்க சொல்லல.. ஆனால், சூழ்ந்து கொண்டிருக்கும் நெருப்பு உங்கள் பானையை பொசுக்கிவிடும்.. எதிர்வினையாற்ற வேண்டும்.. கண்ணுக்கு கண் பார்த்து, முகத்துக்கு முகம் பார்த்து போரிட வேண்டும்.. ஆர்எஸ்ஸும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் நாங்கள் நடுநிலை என்றெல்லாம் யாரும் இனி சொல்லக் கூடாது..
வெட்டவெளிச்சம்
ஒளிவுமறைவு, நடுநிலை இதுக்கெல்லாம் இப்போது இடம் கிடையாது.. நீங்கள் ஆர்எஸ்ஸுக்கு எதிராக இருக்கிறீர்களா? அல்லது ஆதரவாக எதிராக இருக்கிறீர்களா? இதுதான் தேவை.. ஆர்எஸ்எஸ் என்பது வெட்ட வெட்ட விதவிதமான தலைகள் விழும்.. நன்றாக வேலை செய்கிறார்கள்.. தங்கள் கருத்தை, மக்களிடம் விதைக்க முற்பட்டுவிட்டார்கள்.. எவ்வளவு தைரியம் இருந்தால், காந்தி பிறந்த நாள் அன்று ஊர்வலம் கிளம்புவார்கள்? என்ன ஒரு விஷமத்தனம் இது..
ஒளிவுமறைவு
மகாத்மா காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை இந்த பூமி அறியும்.. கோட்சேவின் தம்பி, விடுதலையாகி வெளியே வந்து, நாங்கள் ஏன் காந்தியை கொன்றோம் என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறான்.. அதில் ஆர்எஸ்எஸ்ஸுக்கும், தங்களுக்கும் உள்ள உறவை அதில் தெளிவாக விளக்கி உள்ளான்.. அதனால், ஆர்எஸ்எஸ் மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று ஊர்வலம் எடுப்பது எவ்வளவு விஷமத்தனமானது? ஆனால் சட்டரீதியாக தடுக்க முடியாது.. ஆனால், 2ம் தேதி என்பதை வேற தேதிக்கு மாற்றலாம்,.. 50 இடம் என்பதை 5 இடங்களாக குறைக்கலாம்.. பதற்றமான இடங்களில் அனுமதிக்க முடியாது என்று சொல்லலாம்.. அதையும் ஆர்எஸ்எஸ் ஒப்புக் கொள்வார்கள்..
நெருப்பு + சூழல்
காரணம், மக்களிடம் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நெருங்கினால் போதும் என்றிருக்கிறார்கள்.. 2ம் தேதி இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்.. காந்தி படத்தையும் கோட்சே படத்தையும் ஒன்றாக எடுத்துக் கொண்டு போவார்களா? கோட்சேவை பேரவையில் தியாகி என்கிறார்கள்.. மகாத்மா போட்டோவை துப்பாக்கியால் சுடுகிறார்கள்.. இந்த அக்கிரமத்தையெல்லாம் நாடு பார்த்து கொண்டுதான் இருக்கிறது.. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடுக்க, விசிக, இடதுசாரி துணிகிறார்கள்.. இந்த கட்சிகளைவிட வலிமையான திமுக ஏன் துணியவில்லை.. திமுகவை தடுப்பது எது? இந்த ஆட்சிதான் அதற்கு காரணமாக இருக்கிறது என்றாலும், வேறு வழியில்லை.. கடினமான எதிர்ப்பை திமுக பதிவு செய்தாக வேண்டும்.. நேரம் நெருங்கிவிட்டது.
ராஜபாட்டை
தேசப்பிதாவின் பிறந்தநாள் அன்று ஊர்வலம் எடுக்கிறார்கள் என்றால் என்ன ஒரு விஷமத்தனம் இது? என்ன ஒரு அரசியல் திட்டம்? இதைகூட புரிந்து கொள்வதற்கும், எதிர்வினையாற்றுவதற்கும் ஒரு அசாத்தியமான அரசியல் ஆளுமை தேவைப்படுகிறது.. ஆர்எஸ்எஸ்ஸின் ஆபத்தை திமுக புரிந்து கொண்டுள்ளது.. ஆனால் கையாள முடியாமல் குழம்பி போயுள்ளனர்.. மதவெறியர்கள் முன்னேறி வரும்போது ஒதுங்கிவிட கூடாது.. நீங்கள் ஒதுங்கிவிடுகிறார்கள் என்றால், மதவெறியர்களுக்கு வெண்சாமரம் வீசுவதாகவே அர்த்தம்.. ராஜபாட்டை விரிப்பதாக அர்த்தம்..
சண்டை செய்ங்க
களத்தில் திமுகவை இறக்காமல், விசிகவையும், 2 இடதுசாரிகளையும் உசுப்பிவிடறீங்க.. திருமா கோர்ட்டுக்கு போறார்.. இதுவா தீர்வு? இந்த 3 கட்சிகளுக்கும் என்ன வாக்கு வங்கி இங்கு உள்ளது? பலம்வாய்ந்த ஓட்டு வங்கியை பெற்றுள்ள திமுகததானே இதில் முதலில் இறங்கியிருக்க வேண்டும்? நீங்களே ஒதுங்கிவிட்டால், எப்படி? அதனால், மென்மையாகவும், நாசூக்காகவும் ஒதுங்கி நின்று ஆர்எஸ்எஸ்ஸை திமுக எந்த காலத்திலும் ஜெயிக்க முடியாது.. களத்துக்கு வாங்க.. வந்து சண்டை செய்யுங்க.." என்றார்.