இதெல்லாம் அனுமதிக்க முடியாது! முதல்வர் வீடு முன் வாலாட்டி வசமாக சிக்கிய ஏபிவிபி! ஹைகோர்ட் கண்டிப்பு
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் வீடு முன் ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் செய்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி நடத்திய போராட்டத்தில் 32 பேர் தமிழ்நாடு போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர்.
இதில் 3 பேர் மைனர் என்பதால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 29 பேரையும் காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சிஎம் வீடு முன் போராடிவிட்டு.. போலி முகவரி தந்து எஸ்கேப் ஆக பார்த்த ஏபிவிபி நிர்வாகிகள்? பாயும் கேஸ்
ஏன் போராட்டம்
தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் இந்த போராட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே இவர்கள் இப்படி போலீசை மீறி போராட்டம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கு பின்னணி
இந்த போராட்டத்தின் போது ஏபிவிபி அமைப்பினரை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கியும், உடைகளை கிழித்தும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி புகார் அளித்தார். அந்த புகாரில் ஏ.பி.வி.பி. அமைப்பை சேந்த் 35க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்து சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கௌசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்களது மனுவில் மற்றொரு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர் என்ற முறையில் போராடியதாகவும், முதல்வரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்ததாகவும், ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை என குறிப்பிட்டனர். சட்ட ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை என்று அவர்கள் வாதம் வைத்தனர்.
மனு விசாரணை
இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது. இது சட்ட ஒழுங்கை சீர் குலைக்கும் நடவடிக்கை. இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டால் அது, இது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்கும் செயலாக மாறிவிடும். அதை அனுமதிக்க முடியாது. இதனால் உங்களுக்கு எதிரான வழக்கை நீக்க முடியாது, என்று நீதிபதி தெரிவித்தார். இதனால் அவர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.