ராமேஸ்வரத்தில் மோடி.. கோவையில் அமித்ஷா போட்டியிடணும்.. பரபரப்பு காரணத்தை சொல்லும் அர்ஜுன் சம்பத்
சென்னை: தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்த தேர்தலில் 3ஆவது முறையாக மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக போராடுகிறது. மத்திய அரசின் தவறுகளை பிரச்சாரம் செய்து பாஜகவை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் ஜரூராக பணிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்திலிருந்து அதிக அளவிலான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தருமபுரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தருமபுரியில் பிரதமர் மோடியை தோற்கடித்த பெருமை திமுகவுக்கு சேரட்டும் என அந்த தொகுதியின் எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் பிரதமர் இதை செய்ய வேண்டும். அது போல் மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா கோவையில் போட்டியிட வேண்டும்.
இந்தியாவில் காசி, ராமேஸ்வரம் ஆகிய இரண்டும்தான் முக்கியம். அதனால்தான் நான் சொல்கிறேன். தமிழகத்தில் பிரதமர் மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் கட்சிதான் வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சிலர் முயற்சிக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பதை போல மக்கள் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக- பாஜக கூட்டணிதான் வெல்லும். திராவிட இயக்கங்களின் ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆட்சிதான் சிறந்தது.
திராவிட இயக்கங்களின் முதல்வராக இருந்தவர்களில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை விட சிறந்தவர் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிதான். இவருடைய ஆட்சி காலத்தில்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, மின்சார தடை இல்லை. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மின்தடையும் இருக்கிறது, சட்டம் ஒழுங்கும் சீராக இல்லை. எனவே அதிமுக பாஜக கூட்டணி நிச்சயம் வெல்லும். இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை பொருத்தவரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியையும் திமுகவை பொருத்தமட்டில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சியையும்தான் சிறந்தது என்பார்கள். இதற்கு அவர்கள் கொண்டு வந்த சட்டதிட்டங்களும் நலத்திட்டங்களும் சாட்சியாக உள்ளன. அப்படி உள்ள போது எடப்பாடி பழனிசாமியை அர்ஜுன் சம்பத் புகழ்ந்துள்ளதை அவரே விரும்ப மாட்டார். இந்த நிலையில் அர்ஜுன் சம்பத்தின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications