தனியாக இருக்கும் தாய்க்கு உதவி கேட்ட ராணுவ வீரர்.. உடனே முதல்வரிடம் இருந்து வந்த சூப்பர் ரெஸ்பான்ஸ்
சென்னை: தனியாக இருக்கும் தனது 89 வயது தாயாருக்கு மருத்து உதவி தேவை என்று தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் உங்கள் தாய்க்கு அனைத்து மருத்துவ உதவிகளும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். ரவிக்குமாரின் தாயார் சுப்பிரமணியம்மாள் வயது 89. இவர் கிருஷ்ணா புரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ உதவி உள்பட அத்தியாவசிய உதவிகள் கிடைக்காமல் சுப்பிரமணியம்மாள் தவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவ வீரர் ரவிக்குமார், தனது தயாருக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்தார்.
கொரோனா பாதிப்பு.. இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அந்த டுவிட் பதில் "ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை" என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "தாய்நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறேன்.
கண்டிப்பாக தம்பி. கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று கூறினார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள ராணுவ வீரர் ரவிக்குமார், நன்றி ஐயா, தாங்கள் இருக்கும் தைரியத்தில் நாட்டுக்காக நாங்கள் இங்கு இருக்கிறோம். தங்கள் பணி சிறக்கட்டும் என்று கூறியுள்ளார்.