#StandWithArputhamAmmal கண்டு நம்பிக்கையில் அழுகின்றேன்... அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி
சென்னை: "நாங்கள் இருக்கிறோம் என்று இணையமே எழுந்து நிற்கும் #StandWithArputhamAmmal கண்டு நம்பிக்கையில் அழுகின்றேன்" என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
1991 ஜூன் 11- ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணைக்காக பேரறிவாளன் என்கிற அறிவு எனும் இளைஞன் அழைத்துச் செல்லப்பட்ட நாள்.. தற்போது 30 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
இந்த 30 ஆண்டுகளில் தூக்கு தண்டனை கைதியாக.. தூக்கு மரத்தின் முன்பாக... நீதியை கோரி நீதிமன்றங்களின் கதவுகளை ஓங்கி தட்டியபடி... ஆயுட்கால தண்டனை கைதியாக... எந்த நிமிடத்திலும் விடுதலை என படிநிலைகள் பல கடந்தவர் பேரறிவாளன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரின் விடுதலைக்காக ஒட்டுமொத்த தமிழகமும் உரத்து குரல் கொடுக்கிறது.
இந்த 7 தமிழரின் விடுதலைக்காக மட்டுமல்ல.. தடா நீதிமன்றத்தால் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதும் சரி மாண்டொழியட்டும் மரண தண்டனை என தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரசாரம் செய்தவர் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். அந்த தாயாரின் இடைவிடாத தொடர் பயணம், பிரசாரம்தான் இன்று 7 தமிழரும் எந்த நிமிடத்திலும் விடுதலையாகிவிடுவார்கள் என்கிற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
லாக்டவுன் தளர்வு- மிகமோசமான 2-வது கொரோனா பாதிப்பு அலை இந்தியாவை தாக்கும்- ஜப்பான் ஆய்வு மையம்
உருண்டோடிய 30 ஆண்டுகள்
பேரறிவாளவன் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட 30 -வது ஆண்டை நினைவு கூறும் வகையில் #StandWithArputhamAmmal என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என இந்த ஹேஷ்டேக் மூலம் தீவிரமாகவும் வலியுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
அற்புதம்மாளின் சமர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பதில், இந்திய நீதித்துறை வரலாற்றில் தடா விடுதலைக்கு பின்பும், ஒப்புதல் வாக்குமூலத்தினால் தூக்கு கொடுக்கப்பட்ட ஒரே வழக்கு இதுதான். அதேபோல் CBI அதிகாரி வாக்குமூலத்தில் சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது என்ற பின்பும் 30ஆண்டுகள் சிறைபட்டிருக்கும் ஒரேநபர் பேரறிவாளன் தான்! 11.06.1991 தம்பி அறிவை, அற்புதம் அம்மாள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்த நாள். அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் அநீதி, 30வது ஆண்டிலாவது அறிவின் விடுதலை சாத்தியப்படாதா(?) என்கிற அற்புதம் அம்மாளின் சமரசமற்ற சமரில் அவருக்கு துணையிருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என பதிவிட்டிருந்தார்.
திருமாவளவன் கருத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில், : இராஜீவ் கொலைவழக்கில் சிறைப்பட்டுள்ள எழுவரையும் விடுதலை செய்யவேண்டும். அதேவேளையில், "பேரறிவாளனை அவ்வழக்கில் சேர்த்தது தவறுதான்" என்று விசாரணை அதிகாரியே வெளிப்படையாக கூறியுள்ள நிலையில் அவரது தாயாரின் கோரிக்கை மிகவும் ஞாயமானதேஆகும் என பதிவிட்டிருந்தார்.
அற்புதம்மாள் நெகிழ்வு
இது குறித்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அற்புதம் அம்மாள், 78 வயது கணவரும் 72 வயதில் நானும் எங்கள் வாழ்வின் இறுதியில் இருக்கிறோம் என்பதை நன்கறிவேன் - எனக்கு பின்னே என் மகனின் கதி பற்றி துயருற்று அழுத இரவுகள் பலவுண்டு - நாங்கள் இருக்கிறோம் என்று இணையமே எழுந்து நிற்கும் #StandWithArputhamAmmal கண்டு நம்பிக்கையில் அழுகின்றேன். மகன் வருவான்! என நம்பிக்கையுடன் பதிவிட்டிருக்கிறார்.