வேகமாக பரவும் BA4 கொரோனா.. மத்திய அரசு கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்.. தமிழகத்திற்கு லாக்டவுன் வருமா?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு பல வாரங்களுக்குப் பின்னர் 2000ஐ தாண்டி உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடைசியாகக் கடந்த ஜனவரி மாதம் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் கொரோனா காரணமாக நமக்கு இந்த மூன்றாம் அலை ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக டெல்டாவை போல இல்லாமல் ஓமிக்ரான் பாதிப்பு லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது. மூச்சுத் திணறல், ஆக்சிஜன் தேவை போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 6,357,748 பேர் பலி.. 552,501,051 பேருக்கு பாதிப்பு
ஓமிக்ரான்
இருப்பினும், கேஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது இடங்களுக்குச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், ஓமிக்ரான் கொரோனாவால் மூன்றாம் அலை மிக வேகமாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. இதனால் சில வாரங்களிலேயே கொரோனா கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கப்பட்டன.
உயரும் கொரோனா
இதையடுத்து மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்தச் சூழலில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இந்தியா உட்பட சுமார் 110 நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து உள்ளது,
இந்தியா
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சுமார் 130 நாட்களுக்குப் பின்னர், நேற்றைய தினம் வைரஸ் பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று மட்டும் நாட்டில் 18,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தைத் தாண்டி 1,04,555ஆகப் பதிவாகி உள்ளது.
2000ஐ தாண்டிய கொரோனா
தமிழ்நாட்டிலும் கூட அதே நிலை தான். பல வாரங்களுக்குப் பின்னர் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 2,000ஐ தாண்டி உள்ளது. நேற்று தமிழ்நாடு முழுக்க ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,094 ஆக அதிகரித்து உள்ளது. நல்வாய்ப்பாக கொரோனா உயிரிழப்புகள் இல்லை.
புதிய ஓமிக்ரான் வகைகள்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், தமிழகத்தில் வேகமாகப் பரவும் BA4, BA5 வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
மத்திய அரசு கடிதம்
முன்னதாக இது தொடர்பாக மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுத இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை தயாராக வைத்து இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலச் செயலாளர்களுக்குக் கடிதம் எழுதி இருந்தார். பண்டிகை காலம் வர இருப்பதால் பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்,
பண்டிகை காலம்
கொரோனா பாதிப்புகள் இப்படித் தொடர்ந்து அதிகரித்து வருவதால் எங்கு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் கடும் இன்னலில் பொதுமக்கள் உள்ள நிலையில், அடுத்து வரும் பண்டிகை காலத்தையே அவர்கள் பெரிதும் நம்பி உள்ளனர். இந்தச் சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது அவர்கள் வியாபாரத்திற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சிறு, குறு வியாபாரிகள் கருதுகின்றனர்.
கட்டுப்பாடுகள் எப்போது
இது தொடர்பாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்தாலும் கூட 40 சதவீதத்திற்கும் அதிகமாக மருத்துவ படுக்கை நிரம்பினாலோ பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசு அறிவுறுத்தல் உள்ளது.
இப்போது நிலை என்ன
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தைத் தாண்டி இருந்தாலும் கூட, பாசிட்டிவ் விகிதம் 7ஆகவே உள்ளது. செங்கல்பட்டை (14%) தவிர வேறு எந்த மாவட்டத்திலும் பாசிட்டிவ் விகிதம் 10ஐ தாண்டவில்லை. அதிலும் குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 5க்கும் கீழாகவே உள்ளது. எனவே, வரும் நாட்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் எந்தளவு உள்ளது என்பது மிகவும் முக்கியம். லேசான கொரோனா பாதிப்பே ஏற்படுவதால், இப்போதைய சூழலில் படுக்கைகள் 40% நிரம்ப வாய்ப்புகள் குறைவு.
முதல்வர் ஆலோசனை
இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் பல அறிவுறுத்தல்களைத் தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்தச் சூழலில் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.