புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபைக் கூட்டம் : ஜன.5ல் ஆளுநர் உரை - அப்பாவு அறிவிப்பு
2022ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை வளாகத்தில் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.
சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் வரும் ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இந்த ஆண்டு காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அப்பாவு தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 2020ஆண்டு மார்ச் மாதம் வரை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தை நடத்தினார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று அதிகம் பரவத் தொடங்கியதை அடுத்து தனி மனித இடைவெளியை அதிகரிக்கும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வந்த சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு 2020 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரை, அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கத்தில் தான் நடத்தப்பட்டது.
மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகும் கலைவாணர் அரங்கத்தில் தான் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, கவர்னர் உரை, மானிய கோரிக்கை மீதான விவாதமும் கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபையில் தான் நடத்தப்பட்டது.
தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துவிட்டதால் இனிமேல் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவதற்கு பதிலாக பாரம்பரியம் மிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டமன்றத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கோட்டையில் உள்ள சட்டசபையை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பேரவை மண்டபத்துக்கு பெயிண்ட் அடிப்பது, மேஜை, நாற்காலிகளை சுத்தம் செய்வது, வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் கடந்த வாரங்களில்
கலைவாணர் அரங்கில் உள்ள தற்காலிக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது போல் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கிலும் கம்ப்யூட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கலைவாணர் அரங்கில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய பேரவை மண்டப அமைப்பு அப்படியே இருக்கும். இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோட்டையில் உள்ள சட்டசபையிலும் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்றார். சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக என்று கூறிய சபாநாயகர் அப்பாவு 2022ஆம் ஆண்டு காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications