கட்டுக்கடங்காத கொரோனா.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... மாவட்டத்திற்கு ஒரு கோவிட் மையம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்திற்கு ஒரு கோவிட் மையம் அமைக்கப்படவுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் ரஞ்சீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கொரோனா கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி கல்லூரிகள்
இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் விடுதிகள் மூடவும் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளை மட்டும் நடத்தவும் உத்தரவிட்பட்டுள்ளது. அதேபோல மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இணையவழியில் பாடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவிட் மையங்கள்
உள்ளரங்குகளில் நடத்தப்படும் விழாக்களில் 50% இருக்கைகள் அல்லது 600 பேருக்கு மேல் அனுமதி இல்லை. பொது இடங்களில் மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது சமூக இடைவெளியைப் பொதுமக்கள் பின்பற்றவில்லை என்றால் தண்டனை விதிக்கப்படும். மேலும், மாநிலத்தில் மீண்டும் கோவிட் மையங்களை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணி அலுவலர்கள் அனைவருக்கும் அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படும். மாநிலத்தில் இறப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை
அதேபோல கொரோனா பரிசோதனைகளும் மாநிலத்தில் தொடர்ந்து அதிகப்படுத்தப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி தினசரி 52 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதை 85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

படுக்கைகள் தயார்
மாநிலத்தில் தற்போது 1.24 லட்சம் படுக்கைகள், 7,706 ஐசியு படுக்கைகள், 6,517 வென்டிலேட்டர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்குத் தேவையான மாஸ்க்குகளும் மருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சை, காஞ்சிபுரம், நாகை, சேலம், திருவாரூர், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்
அதேபோல மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 26.08 லட்சம் பேருக்கு முதல் டோஸ், 2.65 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ்கள் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு சுமார் 7.5 லட்சம் தடுப்பூசி குப்பிகள் மத்திய அரசிடம் இருந்து வருவதாகவும் அவை விரைவாக மக்களுக்குச் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications