ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
சென்னை: உங்களில் ஒருவன் பதில்கள் மூலமாக ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
அரசியல், நிர்வாகம், கொள்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பின் கீழ் பதிலளித்துள்ளார்.
கடந்த முறை அக்டோபர் மாதத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் சமூக வலைதளங்களில் கட்சி, கொள்கை, பாஜகவுடனான உறவு உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

மு.க ஸ்டாலின் பதில்
இந்த நிலையில் மீண்டும் உங்களில் ஒருவன் பதில்கள் மூலமாக ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். 11 நிமிடங்கள் 37 வினாடிகளில் ஓடும் அந்த வீடியோவில் ஆரம்பிக்கலாமா... என்று தொடங்கி மு.க.ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தொடங்கினார். அதில் முக்கியமாக ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த நீங்கள், அவர் கொடுத்த தேனீர் விருந்தில் கலந்துகொள்வதா? இது பின்வாங்கல் இல்லையா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

ஆட்சியின் மாண்பை காக்க
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. அன்று ஆளுநர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் படிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக் குறிப்பிலே இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம். அந்த தீர்மானம் ஏற்கப்பட்டு அவையின் மாண்பும் மக்களாட்சி தத்துவமும் நிலைநாட்டப்பட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலளித்து நான் பேசும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும் மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் நூற்றாண்டை கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்றவும் நான் எனது சக்தியை மீறியும் செயல்படுவேன் என குறிப்பிட்டேன்.

எந்த சமரசமும் இல்லை
அதைத்தான் இப்போதும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன். குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபு. குடியரசு நாளில் அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கான பண்பே தவிர இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை.. முன்வாங்கலும் இல்லை எந்த சமரசமும் இல்லை" என்றார். அதேபோல், இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து மிக தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வருகிறதே... என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வினை பொறுத்தமட்டில், தொடர்ந்து இப்படி பேச்சுவார்தைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

கட்சியையே ஏலம் விட்டுவிட்டு
தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு இலங்கையில் வாழும் தமிழர்கள் விரும்புகின்ற வகையில் கிடைக்கவேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் தி.மு.க. எம்.பி.க்கள் இதை வலியுறுத்துவார்கள்" என்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூருவில் ஏலம் விடுகிறார்களே... என்று முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், இங்கே சிலர் அவங்க கட்சியையே ஏலம் விட்டுவிட்டு இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications