தி.மு.க.வுக்கு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆதரவு!
சென்னை: தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர்
மேலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தி.மு.க
இது தொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் 60,000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தி.மு.க கழக ஆட்சிக்கு எங்களின் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம்.
கணினி அறிவியல்
அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை , எளிய மாணவர்களும் உலகத்தரத்திற்கு ஈடான கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் டாக்டர் கலைஞரால் 2008 - 09-ம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு 2011 ஆம் ஆண்டு சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது.
அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்
உன்னதமான கல்வி அரசு பள்ளிக்கு நடைமுறைப்படுத்த இருந்ததை ஆட்சி மாற்றத்தின் காரணமாக அ.தி.மு.க அரசு ஏழை மாணவர்கள் கணினி அறிவியல் கல்வியையும், பாடப்புத்தகங்களையும் வழங்காமல் பத்தாண்டுகள் கிடப்பில் வைத்துவிட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கல்வியை முடக்கி வைத்த அ.தி.மு.க அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். வருகிற தி.மு.க ஆட்சியில் கலைஞர் தந்த கணினி பாடத்தை மீண்டும் அரசு பள்ளியில் உதிக்க செய்து அதற்கான கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.