பல்லாவரத்தில் மீண்டும் பேனர் கலாச்சாரம்.. காற்றில் அலைபாய்வதால் மக்கள் அச்சம்.. விடிவு எப்போது?
சென்னை: சென்னை பல்லாவரம் மற்றும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள விளம்பர பேனர்கள் காற்றின் வேகத்தில் கிழிந்து தொங்குவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்த நிலையில் மீண்டும் உயிர் போகாமல் இருக்க உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக் காலம் என்பதால் இதுபோன்று அபாயகரமாக தொங்கும் பேனர்களை அப்புறப்படுத்த, சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேனர் விழுந்து பெண் பலி
கடந்த 2019ம் ஆண்டு குரோம்பேட்டையை சேர்ந்த ஐ.டி.யில் பணிபுரியும் சுபஸ்ரீ என்பவர் பல்லாவரம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தன்னுடைய மகன் திருமணத்திற்காக கட்சித் தலைமையினரை வரவேற்று சாலை முழுவதும் பேனர்கள் வைத்திருந்தார். இதற்கிடையே பல்லாவரம் ரேடியல் சாலையில் சோழிங்கநல்லூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று சரிந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி ஒன்று சுபஸ்ரீ மீது பயங்கரமாக மோதியது. இதனால் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்
இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அரசாங்கத்தின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என கடுமையாக சாடினார். இந்த வழக்கில் நீதிமன்றமும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன என்றும் இனி சாலைகளில் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கொடிக்கம்பம் விழுந்ததால் விபத்து
இச் சம்பவத்தை தொடர்ந்து கோவையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் சரிந்து விழுந்தது அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சிங்காநல்லூரை சேர்ந்த அனுராதா என்பவர் திடீரென பிரேக் போட நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் அனுராதாவின் இரு கால்களும் நசுங்கியது. இதனால் அவரது தனது கால்களை இழந்தார். அனுராதா விமான நிலையத்தில் இருந்து நீலாம்பூர் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

காற்றில் கிழிந்து தொங்கும் பேனர்கள்
இதற்கிடையே பல்லாவரம் ரேடியல் சாலையிலும், மற்றும் ஜிஸ்டி சாலையிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் காற்றின் வேகத்தில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவை சாலையில் விழுந்தால் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. விபத்து மட்டுமின்றி வாகன ஓட்டிகள் உயிரிழப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்று அபாயகரமாக தொங்கு பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகமும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னையில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications