சென்னை பெசன்ட் நகர் பீச்சில் நீல நிறத்தில் இவ்வளவு அழகான அபூர்வ உயிரினம்.. தயவு செய்து தொட்டுடாதீங்க
சென்னை: சென்னையில் கடற்கரைக்கு செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள். கடற்கரைக்கு அருகில் அழகான தோற்றமுடைய, வண்ணமயமான உயிரினங்கள் மிதப்பதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவற்றைத் தப்பி தவறிக்கூட தொட்டுப்பார்க்காதீர்கள். தொட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்பவர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை. ஏனெனில் கடந்த இரண்டு நாட்களாக, பெசன்ட் நகரின் கடற்கரையிலும், கரையோர நீர்நிலைகளிலும், ப்ளூ டிராகன்கள் (Glaucus atlanticus) என்ற ஒரு வகை கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இந்த நீல டிராகன்கள் திறந்த கடல் மேற்பரப்பில் காணப்படும், அவை சில நேரங்களில் புயல் அல்லது கடலில் ஏற்படும் சில காலநிலை மாற்றங்கள், அதாவது கடல் சீற்றம் காரணமாக கரைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

அப்படித்தான் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்திருக்கிறது இந்த ப்ளூ டிராகன்கள் குறித்தது கடல் உயிரியலாளர்கள் கூறுகையில், சிறிய உயிரினங்கள் "லேசான" விஷத்தன்மை கொண்டவை என்றும் சில நேரங்களில் உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இந்த டிராகன்கள் கொட்டினால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
இந்தியாவின் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீவத்சன் ராம்குமார் இந்த ப்ளூ டிராகன்கள் கண்டறிந்து படங்களை பிரபல ஆங்கில ஊடகத்திடம் தந்திருக்கிறார். இதுபற்றி ஆங்கில ஊடகத்திற்கு ஸ்ரீவத்சன் ராம்குமார் அளித்த பேட்டியில் " நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகரில் உடைந்த பாலம் பகுதிக்கு அருகில் 50 ப்ளூ டிராகன்களை பார்த்தேன். அவற்றில் சில உயிருடன் இருந்தன, மற்றவவை அனைத்தும் மணலில் இறந்து கிடந்தன," என்று கூறினார்.
விலங்கு பிரியர் ஷ்ரவன் கிருஷ்ணனும் அடையாறு முகத்துவாரம் அருகே ப்ளூ டிராகன்களை கண்டிருக்கிறார். "திங்கட்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் அடையாறு கழிமுகம் அருகே நீல டிராகன்களின் குழுக்களை நான் பார்த்தேன்." என்றார்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிஎம்எஃப்ஆர்ஐ) விஞ்ஞானி ஜோ கே கிழக்குடன் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " இந்த நீல டிராகன்களை பார்ப்பது அரிதானது, ஆனால் அவை கோவளம் கரையோரங்களில் கடந்த காலங்களில் காணப்பட்டதற்கான பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன. கடல் சீற்றம் காரணமாக அவை திடீரென சில நேரங்களில் கரை ஒதுங்குகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவை அதிக எண்ணிக்கையில் கரைக்கு வருவதை நான் தனிப்பட்ட முறையில் பார்த்தேன்," என்று கூறினார்.
நீல டிராகன்கள் கடற்கரைக்கு செல்வோருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சற்று நச்சுத்தன்மை கொண்டவை. ஏனெனில் நச்சுத்தன்மையுள்ள சைபோனோஃபோர்ஸ், வயலட் நத்தை போன்ற ஆபத்தான விஷத்தை உண்கின்றன. நீல டிராகன் கள் ஸ்டிங் நெமடோசிஸ்ட்களை தங்கள் கைகளில் சேமித்து வைக்கின்றன. எனவே இவை குழந்தைகளை கொட்டினால் சற்று வலி அதிகமாக இருக்கும். கடற்கரையில் நீச்சல் அடிப்பவர்கள், குளிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனினும் நீல டிராகன்களால் பகல்நேர வெப்பத்தை தாங்க முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications