டிஐஜி அப்பாவை பந்தாடிய எம்ஜிஆர்.. ஜெயலலிதாவால் சங்கடத்துக்கு ஆளான பீலா IAS! பலரும் அறியாத ப்ளாஷ்பேக்
சென்னை: பீலா வெங்கடேஷ் ஐஏஎஸ்-ன் மரணம் தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிகச் சிறந்த நிர்வாகி என பெயர் பெற்றாலும் ஜெயலலிதா காலத்தில் பல இடமாறுதல்களுக்கு உள்ளானார் பீலா. அதே நேரத்தில் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற அவரது தந்தை வெங்கடேசன் எம்ஜிஆர் காலத்தில் டிரான்ஸ்பர் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீலா வெங்கடேசன் IAS.. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்திய கடினமான காலத்தில், தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் முகமாக திகழ்ந்தவர் இவர்தான். மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்த அந்த அச்சமான நாட்களில், தினமும் தொலைக்காட்சியில் தோன்றி கொரோனா தொடர்பான தகவல்களையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் தெளிவாக விளக்கி மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியவர் பீலா.
அந்த காரணத்தால்தான் அவர் பெயர் இன்று வரை மக்களின் நினைவில் உறுதியாக பதிந்துள்ளது. ஆனால், இப்போது அந்த முகம் நம்மிடையே இல்லை. வெறும் 56 வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார்.

பீலா ராஜேஷ்
1969-ஆம் ஆண்டு பிறந்த பீலா, முன்னாள் டிஜிபி என். வெங்கடேசன் மற்றும் சாத்தான்குளம் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன் தம்பதியரின் ஒரே மகள். சென்னையில் செல்வச் செழிப்பில் வளர்ந்த பீலா, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து முடித்தார். பின்னர் 1992-ஆம் ஆண்டு, தந்தையாரின் ஆலோசனையின் பேரில் ஒடிசா கேடரில் பணியாற்றிய IPS அதிகாரி ராஜேஷ் தாஸ் உடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் - பிங்கி மற்றும் பிரீத்தி உள்ளனர்.
பீலா IAS மரணம்
மருத்துவராக இருந்த பீலா, தந்தையின் ஊக்கத்தால் 1996-ஆம் ஆண்டு UPSC தேர்வை வெற்றி பெற்று IAS அதிகாரியாக பணியில் சேர்ந்தார். முதலில் பீகார் மாநிலத்தில் பணியாற்றிய அவர், பின்னர் நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் முதன்முதலில் சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார். பொதுமக்களின் மனுக்களை நேரடியாகக் கேட்டு தீர்வுகள் வழங்கும் பணியை சிறப்பாக செய்தாலும், அதற்குப் பதிலாக இடமாற்றமே அவருக்குக் கிடைத்தது. அதன் பின்னர் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய பீலா, தனது அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் மூலம் சிறந்த நிர்வாகியாக பெயர் பெற்றார்.
கொரோனா வீராங்கனை
பீலா ராஜேஷின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது 2020-ம் ஆண்டின் கொரோனா காலம். அப்போது அவர் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை செயலராக இருந்தார். நாடு முழுவதும் மருத்துவ அவசரநிலை நிலவிய நிலையில், அவர் தினசரி பத்திரிகையாளர் சந்திப்புகள், தொலைக்காட்சி பேட்டிகள் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். அவரின் அமைதியான பேச்சும், தெளிவான விளக்கங்களும், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உணர்த்தின. அந்த கடினமான சூழ்நிலையிலும் அவர் பொதுமக்களிடம் எளிதாக சென்றடைந்த அதிகாரியாக திகழ்ந்தார்.
வெங்கடேசன் ஐபிஎஸ்
இது ஒருபுறம் இருக்க பீலா நிர்வாகப் பொறுப்புக்கு வர முக்கிய காரணம் அவரது தந்தை வெங்கடேசன் தான். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் டிஐஜி யாக இருந்தபோது எம்ஜிஆர் அவரை அழைத்திருக்கிறார். நடிகை ஒருவரை சென்னை விமான நிலையத்தில் பெண் போலீசார் சோதனை செய்தால் டிஐஜி வெங்கடேசனை அழைத்து எம்ஜிஆர் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் திருச்சியில் வெங்கடேசன் பணியாற்றிய போது இப்போது காங்கிரஸில் இருக்கும் திருநாவுக்கரசர் ஒரு சில எஸ்ஐகளை பணியிட மாற்றம் செய்யச் சொல்லி வெங்கடேசனிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதனை வெங்கடேசன் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.
எம்ஜிஆர் இடமாற்றம்
இதை அடுத்து திருநாவுக்கரசர் டிஐஜி வெங்கடேசன் குறித்து எம்ஜிஆர் இடம் புகார் கொடுத்து இருக்கிறார். இதனால் டிஐஜி வெங்கடேசன், அப்போதைய திருச்சி ஆட்சியரை உடனடியாக தூக்கி அடித்தார் எம்ஜிஆர். இப்படி அதிகாரம் என்னவெல்லாம் செய்யும் என்பதை உணர்ந்திருந்த வெங்கடேசன் தனது மகளை ஆட்சி பணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை படிக்க வைத்து ஐஏஎஸ் ஆக்கினார். ஆனாலும், அதிமுகவின் ஜெயலலிதாவால் பீலாவும் பலமுறை தூக்கியடிக்கப்பட்டார்" என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications