Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தால் இவ்வளவு நன்மைகளா? - பட்டியல் தந்த முதலமைச்சர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'காடு வளமாக இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும்' என்பது சூழல் ஆர்வலர்கள் உச்சரிக்கும் மந்திரச் சொல். 'இது எந்தவகையில் சரி?' என்ற கேள்வி எழுகிறதா? எந்த நதியும் சமதளத்தில் உருவாவதில்லை. காட்டில் பெய்யும் மழைநீர்தான் சுனையாக மாறி பின் அருவியாகி, இறுதியில் நதியாக நிலத்தை வந்தடைகிறது.

கடல் வற்றாமல் இருக்கவேண்டும் என்றால் மலை, செழிப்பாக இருக்க வேண்டும். மலை, பசுமையாக இருந்தால்தான் மழை வளமாகப் பெய்யும். இதுதான் பூமி இயங்குவதற்கான அடிப்படை.

15 ஆண்டு கனவை நனவாக்கிய ஸ்டாலின்

15 ஆண்டு கனவை நனவாக்கிய ஸ்டாலின்

சூழலின் அடிப்படையை உணர்ந்தவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அண்மையில், அவர் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 11,806 ஹெக்டேர் பரப்பளவை, தேவாங்கு வனச் சரணாலயமாக அறிவித்தார்.

'அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கினத்தைக் காப்பாற்றுவதற்கு இந்த முயற்சி உதவும்' எனப் பலரும் வரவேற்றனர். ஏறக்குறைய 15 ஆண்டுகால தேவையை ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில் கவனத்தில் எடுத்துக் கொண்டு, இதனை ஸ்டாலின் செய்து முடித்தார்.

'இந்தியாவிலேயே தேவாங்கு இனத்துக்கென தனி சரணாலயத்தைத் தமிழ்நாடு அரசுதான் அறிவித்துள்ளது' என்பதால் உலகமெங்கும் உள்ள வனஉயிரின ஆர்வலர்கள் உற்சாகமடைந்தனர்.

அரசின் இந்த அறிவிப்பு வெளியான சூடு தணிவதற்குள் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது, 'தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் அமைகிறது' என்ற அறிவிப்புதான் அது.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓசூர் அருகே 686.406 சதுர கி.மீ பரப்பளவிலான காட்டுப்பகுதி, 'காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்' என அழைக்கப்பட உள்ளது.

இந்தச் சரணாலயத்தில் 35 வகையான பாலூட்டிகளும் 238 வகையான பறவைகளும் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மண்ணைக் காக்க மழை வேண்டும்; மழையைப் பெற வேண்டும் என்றால் வனம் வேண்டும்; வனம் வாழ வேண்டும் என்றால் இந்தப் பறவைகள், பாலூட்டிகள் காப்பாற்றப்பட வேண்டும். ஆகவேதான், இப்படியொரு அறிவிப்பு.

நீர் நாய்கள்; சாம்பல் நிற அணிகள்

நீர் நாய்கள்; சாம்பல் நிற அணிகள்

காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் மென்மையான ஓடு கொண்ட ஆமைகள், சாம்பல் நிற அணில்கள், நீர் நாய்கள், சதுப்புநில முதலைகள், மான்கள், கழுகுகள், புலிகள் ஆகிய காட்டு உயிர்களுக்கு உகந்த வாழ்விடமாக விளங்குகிறது.

அதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய காப்புக்காடுகளில் உள்ள ஒரு பகுதியை மட்டும் 'காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது. இச்சரணாலயம், தற்போது காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயமாக உள்ள காடுகளுடன் இணைந்த பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும்.

இது கர்நாடகாவில் உள்ள கொஞ்சம் பகுதியையும் தமிழ்நாட்டில் உள்ள பகுதியையும் சேர்த்துப் பகிர்ந்து கொள்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 25.04.2022 அன்று சட்டப்பேரவையில் வெளியானது. மேலும், இச்சரணாலயம் நந்திமங்கலம் மற்றும் உளிபண்டா, அதேபோல் கோவை பள்ளம் மற்றும் அனேபித்தஹல்லா ஆகிய இரண்டு முக்கியமான யானை வழித்தடங்களை உள்ளடக்கி உள்ளது.

அத்துடன், '50 கி.மீட்டர் தூரத்துக்குக் காவிரியின் இரு கரை பகுதிகளையும் சார்ந்த சூழலியலும் பாதுகாக்கப்படும்' என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பில் சகாப்தம்

வனப் பாதுகாப்பில் சகாப்தம்

அரசின் அறிவிப்பு குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் தனது டுவிட்டர் பதிவு ஒன்றில், 'தமிழ்நாடு வனப் பாதுகாப்பில் இது ஒரு புதிய சகாப்தம். 68,640 ஹெக்டேர் பரப்பளவில் புதிய சரணாலயத்தை அரசு அறிவித்துள்ளது. இது வனவிலங்குகளின் சொர்க்கமாக விளங்குகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாக, காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TN Green Climate Company) செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளுடன் இம்முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரு உதவி புரியும்' எனத் தெரிவிததுள்ளார்.

புதிய சரணாலயம் குறித்து சூழலியல் எழுத்தாளர் நக்கீரனிடம் பேசினோம். தமிழ்நாட்டில் வனம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வரும் நக்கீரன், அமேசான் போன்ற காட்டுப் பகுதிகளில் பணி நிமித்தமாக நிறைய அனுபவங்களைப் பெற்றவர்.

சரணாலயத்தால் யாருக்கு லாபம்?

சரணாலயத்தால் யாருக்கு லாபம்?


"ஒரு குறிப்பிட்ட விலங்களைக் காப்பாற்றுவதற்காக அரசு சரணாலயங்களை அமைப்பது வழக்கம். ஏற்கெனவே, முதுமலை மற்றும் களக்காடு போன்ற பகுதிகளைப் புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. வேடந்தாங்கல் போன்ற இடங்கள் பறவைகளின் சரணாலயமாக உள்ளது.

மலை அணில்களுக்காக ராஜபாளையம் பகுதியில் ஒரு சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இச்சரணாலயம் வன உயிரினங்களின் உயிர்ச்சூழல் எவ்வித நெருக்கடிக்கும் உள்ளாகாமல் இயல்பாக வாழ வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. அதேபோல, இப்போது 'காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்' அமைக்கப்பட்டுள்ளது.

காவிரியின் வடக்குப் பகுதியில் கர்நாடக மாநிலத்தில் மாதேஸ்வரன் மலை சரணாலயம் செயல்பட்டு வருகிறது. அடுத்து, பிலிகிரிரங்க மலையில் புலிகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. அதன் தென்பகுதியில்தான் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் உள்ளது.

ஆனால், காவிரியின் தென்பகுதி இதுவரை காப்புக்காடாக மட்டுமே இருந்தது. இதைத்தான் இப்போது சரணாலயமாக அறிவித்துள்ளனர். ஓசூர் முதல் மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதியான மேட்டூர் அணை வரையில் இதை விரிவாக்கம் செய்துள்ளனர். ஒகேனக்கல் பகுதியில் காவிரி நுழைவதிலிருந்து மேட்டூர் அணை வரையில் என இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

 யானைகளைக் காப்பாற்ற வழி

யானைகளைக் காப்பாற்ற வழி

அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானது, ஏனென்றால் புலிகள், யானைகள் ஆகியவற்றுக்கு சரணாலயம் செயல்பட்டு வருகிறது. ஆனால், காவிரி தெற்கு சரணாலயத்தால் நன்னீர் மீன்கள், குறிப்பாக நீர் நாய்கள் பெரிதும் காப்பாற்றப்படும். மேட்டூர் பகுதி என்பது மீன்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.

இந்த பகுதி முழுக்கவே, 'சந்தனக் கடத்தல்' வீரப்பன் நடமாடிய பகுதி. இது வேட்டை நிலமாக இருந்த பகுதி. அவர் இப்போது இல்லை என்றாலும் வேட்டைகள் முற்றிலும் தடுக்கப்படவில்லை. அரசின் அறிவிப்பின் மூலம் வேட்டை முற்றிலுமாக தடுக்கப்படும். இதில், யானைகளின் வலசைப் பாதைகள் அதிகம் உள்ள பகுதியும் அடங்கியுள்ளது. இதனை மிக முக்கிய அறிவிப்பாக நான் பார்க்கிறேன்" என்கிறார் நக்கீரன்.
---

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+