துணி மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க், N95 மாஸ்க்.. எதை அணிவது பாதுகாப்பானது? மருத்துவர்கள் பரிந்துரை என்ன
சென்னை: உலகை கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பாக இருக்க எந்த வகையான மாஸ்க்கை பயன்படுத்தலாம், அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்,
கொரோனா காற்றில் பரவும் ஒரு வகையான வைரஸ் ஆகும். இப்போது பரவும் ஓமிக்ரான் கொரோனா என்பது டெல்டா கொரோனாவை காட்டிலும் மிக வேகமாகப் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகின்றன.
சென்னையில் புது தலைவலி.. வீட்டு தனிமையில் இருப்பவர்களால் குடும்பத்தினருக்கு வேகமாக கொரோனா பரவுதாம்
இருந்தாலும், சரியான மாஸ்குகளை அணிந்து முறையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் இந்த ஓமிக்ரான் கொரோனாவையும் கூட எளிதாகச் சமாளிக்க முடியும். அது எப்படி எனத் தெரிந்துகொள்ளலாம்.
எப்படிப் பரவுகிறது
பொதுவாக நாம் அனைவரும் சுவாசிக்கும்போதும், பேசும்போதும், இருமும்போதும் நமது வாய் மற்றும் மூக்கில் இருந்து சிறு துகள்கள் மற்றும் துளிகள் வெளியேறும். அதாவது கொரோனா நோயாளி ஒருவரின் வெளிவரும் துகள்களை அருகில் இருப்பவர்கள் சுவாசிக்கும் போது, அவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அதேநேரம் வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் நல்ல மாஸ்க் அணிந்தால், அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு வைரஸ் பரவல் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்பதை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பல வகையான மாஸ்க்குகள்
அதேபோல வைரசால் பாதிக்கப்படாத நபரும் சரியான மாஸ்க் அணிந்தால், வைரஸ் துகள்களை அவர்கள் சுவாசிக்கும் ஆபத்தும் குறைகிறது. இதுமட்டுமின்றி காற்று மாசில் இருந்தும் மாஸ்க் நம்மைக் காக்கின்றன. அலுவலகம், மருத்துவமனைகள் திருமண மண்டபங்கள், கடைகள், பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் என மூடப்பட்ட நிலையில் உள்ள அனைத்து இடங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும். அதேபோல சந்தை, மால் போன்ற நெரிசலான இடங்களிலும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா பரவ கடந்த இரண்டு ஆண்டுகளில், நாம் பெரும்பாலும் துணி மாஸ்க்குகள், அறுவைசிகிச்சை மாஸ்க்குகள், N95, KN95, KF94, FFP2 எனப் பல வகையான மாஸ்க்குகள் குறித்துக் கேள்விப்பட்டிருப்போம். இருப்பினும், இவற்றில் எது ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
துணி மாஸ்க் & சர்ஜிக்கல் மாஸ்க்
துணி மாஸ்க் என்பது பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளிவரும் பெரிய நீர்த்துளிகளைக் குறைக்கிறது, ஆனால் இவை சிறிய துகள்களைத் தடுக்க தவறுவதால் சுற்றி இருக்கும் நபருக்கு போதிய பாதுகாப்பை அளிக்காது. அடுத்து சர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் அறுவைசிகிச்சை மாஸ்க்குகள் 3 ஃபில்டர்களை கொண்டதாகும். இருப்பினும், இதை அணியும்போது மூக்கின் அருகே சில இடங்களில் இடைவெளி இருக்கும். இதன் மூலம் வைரஸ் எளிதாக உள்ளே நுழையும் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க துணி மாஸ்க், அதற்கு மேல் சர்ஜிக்கல் மாஸ்க் என இரட்டை மாஸ்குகளை அணியலாம்.
சிறந்த பாதுகாப்பு இந்த மாஸ்க் தான்
இருப்பினும், வைரஸ் பரவலை சிறப்பாகத் தடுக்கும் மாஸ்க்குகள் என்றால் அவை N95, KF94 போன்ற மாஸ்க்குகள் தான். இவை குறைந்தபட்சம் 95% அல்லது 94% துகள்களைத் தடுக்கிறது. அதேநேரம் வால்வுகள் உள்ள மாஸ்க்குகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் மாஸ்க் அணிந்துள்ள நபரிடம் இருந்து வெளியேறும் துகள்களைத் தடுப்பதில்லை. அதாவது துணி மாஸ்க்குகள் அல்லது சர்ஜிக்கல் மாஸ்குகளை காட்டிலும் இதுபோன்ற மாஸ்க்குகள் நமக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. எனவே, அனைவரும், குறிப்பாக முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் இந்த வகை மாஸ்க்குகளை பயன்படுத்தலாம்.
எப்படி யூஸ் செய்ய வேண்டும்
கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் இதுபோன்ற மாஸ்க்குகளுக்கு கடும் தட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இப்போது மாஸ்குகளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை. N95, KF94 போன்ற மாஸ்க்குகள் ஒருவர் குறைந்த விலைக்கு வாங்க முடியும். இதுபோன்ற மாஸ்க்குகளை முறையாகப் பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை இதைப் பயன்படுத்தலாம். முடியாதவர்கள் குறைந்தபட்சம் டபுள் மாஸ்க் முறையைப் பின்பற்றினால் நம் அனைவருக்கும் பாதுகாப்பைத் தரும். அதேநேரம் இதுபோன்ற மாஸ்க்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை நாம் முறையாக அணிய வேண்டும். மாஸ்க்குகளை அணியும் நம்மில் பலர் மூக்குகளை மூடும்படி மாஸ்க் போடுவதில்லை. இது மிகப் பெரிய தவறு. இதன் மூலம் கொரோனா மற்றவர்களுக்கு மிக எளிதாகப் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல ஒரே மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தும்போது, அது தளர்ந்துபோகவும் வாய்ப்புள்ளது. அதுபோன்ற மாஸ்க்குகளையும் நாம் பயன்படுத்தக் கூடாது.
சோதனை
நாம் மாஸ்க்கை முறையாக போட்டுள்ளோமா என்பதைச் சோதனை செய்ய மிக எளிமையான ஒரு வழி இருக்கிறது. அதாவது மாஸ்க் அணிந்த பிறகு, பலமாக ஒரு முறை ஊதுங்கள். அப்போது மாஸ்க்கில் எந்த பக்கத்தில் இருந்து காற்று வெளியே வருகிறதோ, அங்கு மாஸ்க் சரியாக இல்லை என அர்த்தம். அந்த இடத்தில் மாஸ்க்கை சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மீண்டும் பயன்படுத்தலாமா
ஒரு முறை பயன்படுத்தும் மாஸ்க்கை மீண்டும் யூஸ் செய்யலாமா என்றால் பயன்படுத்தலாம் ஆனால் சில விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். N95 மாஸ்க்குகளை ஒருவர் 2 அல்லது 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அதேநேரம் அவை தளர்வாக இருந்தால், மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அதேபோல துணி மாஸ்க்குகளை முறையாகச் சுத்தப்படுத்தி சூரிய வெயிலில் உலர வைத்து மீண்டும் பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்,
வேக்சின் முக்கியம்
கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவது கொரோனா பரலைத் தடுக்கும் என்றால் முழுமையாக வேக்சினை எடுத்துக் கொள்வது உயிரிழப்பைத் தடுக்கும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.