தலைவா நீ எட்டாத உயரமில்லை.. இப்போ சொல்றேன் நீ தமிழன்தான்.. ரஜினியின் முடிவுக்கு பாரதிராஜா உருக்கம்
சென்னை: நீ எந்த மொழிக்கும் சொந்தக்காரன் அல்ல ரஜினி என இயக்குநர் பாரதிராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதையும் வரவேற்றுள்ளார்.
ஜனவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்குவேன் என அறிவித்த ரஜினிகாந்த், உயர் ரத்த அழுத்தத்தால் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து பின்வாங்கினார்.
ரஜினியின் இந்த முடிவு பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் முடிவு குறித்து இயக்குநர் பாரதிராஜா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்
அதில் அவர் கூறியிருப்பதாவது, "மிக பிரளயமாக ஒரு விஷயம் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் இதோ அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் ஒரு தேதியில் அவர் கட்சியை அறிவிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ரஜினியுடன் நண்பனாக நிறைய சண்டை போட்டிருக்கிறேன். என் நண்பன் ரஜினி இமயமலையின் உச்சி. அதற்கு மேல் ஒன்று இல்லை. பணம், புகழ் அனைத்தும் அவருக்கு கிடைத்து இமயமலையின் உச்சியை அடைந்து விட்டார். இனிமேல் அங்கிருந்து குதித்தாலும் வேஸ்ட் தான்.
பூக்களின் வாசம் நுகர்ந்தாய்
நீ புல்லில் நடந்தாய். பூக்களின் வாசம் நுகர்ந்து நடந்தாய். உன் பாதங்கள் புனித நீரிலே நனைந்து வந்தன. புழுதியின் உன் கால்கள் பதிய வேண்டுமா என்று கேட்டேன். அது அவருக்குத் தெரியும். இதெல்லாம் காலச்சக்கரங்களில் ஒவ்வொரு காலகட்டங்களில் நகர்ந்துவிட்டது. அரசியல் சூதாட்டக் களம் என்பது வேறு. கலைஞர்களின் களம் என்பது வேறு.
#RajinikanthPoliticalEntry #RajinikanthHealthCondition pic.twitter.com/LI3RWYjPKv
— Bharathiraja (@offBharathiraja) December 29, 2020
காய் நகர்த்த முடியாது
அரசியல் சூதாட்டக் களத்தில் என்னால் காய் நகர்த்த முடியாது. ஏனென்றால் மென்மையான பூக்களையும், மக்களையும், மலைகளையும், நதிகளையும் ரசித்தவன். நான் உள்ளே நுழைய வேண்டும் என்றால் என் கை கறை படிய வேண்டும். கட்சி நடத்த வேண்டும் என்றால் கறை படிய வேண்டும். நான் அந்த மாதிரி ஆளில்லை. மரணத்தின் போதும் என் கை, உழைப்பால் நான் வாழ்ந்தேன். என் உழைப்பால் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் உழைப்பின் ஊதியத்தில் இவர்கள் என்னை புதைக்கப் போகிறார்கள். இது தான் நான். இதை தான் நான் அவனிடம் பேசினேன்.
வேதனை
சமீபத்தில் ரொம்ப ஃபீல் பண்ணேன். ஹைதராபாத் ஷூட்டிங்குக்கு போனவர் அங்கு 6 பேருக்கு கொரோனா பாதிப்பு. உன் வயதென்ன.? மருத்துவமனையில் அனுமதித்தார்கள். நான் மருத்துவமனையில் எஸ்.பி.பி.யை பார்த்தேன். அந்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும். என் நண்பனை இழந்த வலி. உன்னுடன் இருப்பவர்கள் ஆயிரம் சொல்லலாம் அது வேறு. உன் வலி, வேதனை உன் உடம்புக்கு மட்டும் தான் தெரியும். மனதுக்கு மட்டும் தான் தெரியும். மருத்துவமனையில் இருக்கும் சமயத்தில் நான் பேசினேன்.
அரசியல் தேவையா?
எப்போதுமே அவரைத் தலைவா என்று தான் அழைப்பேன். தலைவா நீ எட்டாத உயரமில்லை. இனியும் உனக்கு அரசியல் தேவையா. மன நிம்மதி தான் தேவை. பிறப்பு ஒருமுறை தான். நீ பெரிய ஆன்மீகவாதி. கடவுள் உனக்கு எல்லா அனுக்கிரகங்களையும் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் நீ எங்கு செல்ல வேண்டும். தயவு செய்து அரசியலுக்கு வருவது குறித்து யோசி என்று சொல்லி அழுதேன். என் ரஜினி என் நண்பனாக கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்று கண்ணீருடன் சொன்னேன். அவனுக்கும் அதே உணர்வு இருந்தது. என்ன முடிவெடுப்பார் எனத் தெரியாமல் இருந்தேன்.
அரசியல் பயணம்
இப்போது ஒரு முடிவு எடுத்திருக்கிறார். சரியான முடிவு. இது சாதாரணமானது அல்ல. அவன் எளிதில் முடிவெடுக்க மாட்டான். முன்பெல்லாம் கட்சி ஆரம்பிக்கப்போவது குறித்து சொன்னான். என்னதான் இருந்தாலும் மனிதனுக்கு சில குழப்பங்கள் வரும். அல்டிமேட்டாக யோசிக்கும் போது ஒரு முடிவு வரும். ரஜினியின் இந்த முடிவு சரியான முடிவு. எங்கே நான் பெருமைப்பட்டேன் என்றால் ரஜினி ரசிகர்கள் உங்களை நம்பி இவ்வளவு தூரம் பயணித்தோம் அரசியல் பயணம் வரும் என்று எதிர்பார்த்தோம்.
உயிர் முக்கியம்
திடீரென்று கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கொதித்துவிடுவார்களோ என நினைத்தேன். ஏனென்றால் அவன் வெறிபிடித்த ரசிகன். ஆனால் எந்த ஒரு ரசிகனும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களோடு பயணப்பட்டிருக்கிறான். இல்லையென்றால் பெரிய கலவரம் நடந்திருக்கும்.ரஜினி என்ன சொல்கிறாரோ அதுதான். எங்களுக்கு அவர் உயிர் முக்கியம். உடல் முக்கியம் என்கிறார்கள். அந்த ரசிகர்களுக்கு பாராட்டுகள். இந்த ரசிகர்கள் கிடைத்திருப்பது பெரிய விஷயம்.
நல்ல முடிவு
ஆன்மீகத்தின் உச்சத்தில் நீ ஜெயித்திருக்கியாய். நல்ல முடிவு எடுத்திருக்கிறாய். ஐ லவ் யூ. நீ எந்த மொழிக்கும் சொந்தக்காரனல்ல. தமிழக மக்கள் உன்னை விரும்பினார்கள். நீ மராட்டியன் அல்ல. கன்னடன் அல்ல. நீ தமிழன். அதை இப்போது ஒப்புக்கொள்வேன். ஏனென்றால் நீ ஒருமுறை சொன்னாய். நான் முதல்வராக வரமாட்டேன். ஒரு தமிழனைத் தான் முதலவராக்குவேன் என்று சொன்னபோது நான் கை தட்டினேன். உனக்காக வேண்டிக் கொள்கிறேன்.
முரட்டுத்தனம்
3 நாட்களுக்கு முன்னால் உனக்காக கோயிலுக்குச் சென்று வேண்டினேன். போன் பண்ணினேன். அழுது கொண்டே பேசினேன். ஏனென்றால் நீ எனக்கொரு நல்ல நண்பன். இது ஒரு சாக்கடை. நீ இங்கிருந்தே மக்களுக்கு நல்லது செய்யலாம். யாருடைய சொல்லையும் கேட்காமல் தனித்து முடிவு எடுப்பதில் நீ தலைவன். கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். அந்த முரட்டுத் தனத்தில் எடுத்த முடிவை வரவேற்கிறேன். யார் என்ன சொன்னாலும் கேட்க வேண்டாம். நீ முக்கியம். உன் உயிர் முக்கியம். ரசிகர்களுக்கு நீ முக்கியம்." இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.