அறிவாலயம்+ஆழ்வார்பேட்டை: ஒரே மேடையில்.. ‘மாஸ்’ சம்பவத்திற்கு ரெடி? சூசகமாக சொன்ன கமல்! ஜரூர் பிளான்!

ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மடையில் கமல்ஹாசன் பேசுவதற்கான திட்டம் வகுக்கப்படுகிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி கணக்குகள் கருதி காங்கிரஸை நோக்கி நகர்ந்து வந்த கமல்ஹாசனுக்கு, இந்த இடைத்தேர்தல் எதிர்பாராத திடீர் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்த நிலையில், கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அதற்கு கமலும், ஒன்று கூடுவோம்.. வென்று காட்டுவோம் என பதில் அளித்துள்ளார்.

 ஈரோடு கிழக்கு - பாஜக குழப்பம்

ஈரோடு கிழக்கு - பாஜக குழப்பம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி, அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுவது உறுதியாகிறது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இந்த முறை தேர்தலை சந்திக்கப் போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இடைதேர்தலை சந்திக்க உள்ளதால், யாருக்கு யார் ஆதரவு என்பதில் பாஜகவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 முழுவீச்சில் திமுக

முழுவீச்சில் திமுக

அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பும் வேட்பாளரை தேர்வு செய்ய மும்முரமாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. தனிப்பட்ட செல்வாக்கு மிக்க வேட்பாளரை நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே வேகத்தில் தொகுதியை தக்கவைக்க திமுக கூட்டணியினர் முழுவீச்சில் பரப்புரையையும் தொடங்கிவிட்டனர்.

 கமல் - இளங்கோவன் மீட்டிங்

கமல் - இளங்கோவன் மீட்டிங்

திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். மேலும், கமல்ஹாசன் தங்களுக்கு ஆதரவளிப்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சமீபத்தில், காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் டெல்லியில் இணைந்தார் கமல்ஹாசன். ராகுல், கமலுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்று தனது படை பட்டாளத்தோடு டெல்லி சென்று ராகுலுடன் நடைபயணத்தில் பங்கேற்று, கூட்டத்திலும் உரையாற்றினார்.

 எதிர்பாராவிதமாக ஏற்பட்ட வாய்ப்பு

எதிர்பாராவிதமாக ஏற்பட்ட வாய்ப்பு

இதனால், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை ஆதரித்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரம் போடுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. முன்னதாக, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வந்தார் கமல்ஹாசன். அதன் மூலம் திமுகவுடன் இணக்கத்திற்கு ரெடியாகி வந்ததாகவே கருதப்பட்டது. 2024 தேர்தலுக்கு மநீம - திமுக கூட்டணியில் இணையும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டு இப்போதே இந்தக் கூட்டணிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

 கமல் ஆதரவுக் குரல்

கமல் ஆதரவுக் குரல்

இந்நிலையில் தான் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும், மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக கட்சி பேதம் கடந்து இளங்கோவனை ஆதரிப்பதாகவும் கமல் தெரிவித்தார்.

 தேச நலனுக்காக ஒரே மேடையில்

தேச நலனுக்காக ஒரே மேடையில்

மேலும் பேசிய கமல்ஹாசன், "காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும் என்பதுதான் எனது அரசியல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

 நன்றி சொன்ன ஸ்டாலின் - கமல் சொன்ன பதில்

நன்றி சொன்ன ஸ்டாலின் - கமல் சொன்ன பதில்

கமல்ஹாசன், திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,"நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன், "ஒன்று கூடுவோம்.. வென்று காட்டுவோம் #தமிழ்நாடு வாழ்க!" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 ஆதரவாக பிரச்சாரம்

ஆதரவாக பிரச்சாரம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சூசகமாகவும் தெரிவித்துள்ளார் கமல். செய்தியாளர் சந்திப்பின்போது, பிரசாரத்திற்குச் செல்வீர்களா எனக் கேட்டதற்கு, "எல்லா உதவிகளையும் செய்வோம் எனச் சொல்லும்போது அதுவும் உட்பட்டுவிடுகிறது. அதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. நான் போகாமல் அதை அவுட் - சோர்ஸ் செய்ய முடியாது" என தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார்.

 எம்.பி ஆகப் போறீங்களா?

எம்.பி ஆகப் போறீங்களா?

நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்பதுதான் உங்கள் ஆசையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மக்களுக்குப் பணி செய்ய வேண்டுமென்பதுதான் எனது ஆசை என்றார் கமல்ஹாசன். மேலும், நான் ஏன் எம்பி ஆக கூடாது. கமல்ஹாசன் முதலமைச்சர் ஆக வேண்டும் என சொன்னதற்கு கோபப்படாத நீங்கள் ‘மெம்பர் ஆஃப் பார்லிமெண்ட்' என சொல்லும்போது ஏன் கிண்டல் செய்கிறீர்கள்" என்றார். மேலும் அப்படி இருக்கலாம் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசையை சூசகமாக தெரிவித்துள்ளாரா கமல்ஹாசன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ஒரே மேடையில்

ஒரே மேடையில்

முக்கியமாக, இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு ஒரே மேடையில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசுவதற்கும் தயாராகி விட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். இந்த இடைத்தேர்தல் பரப்புரையின் ஹைலைட் சம்பவமாக அந்த மேடை தான் இருக்கப்போகிறது. இதன் மூலம், 2024 கூட்டணிக்கு ஸ்ட்ராங்காக அஸ்திவாரம் போடப்பட ஒருக்கிறது. இதற்கான வேலைகள் பின்னணியில் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவிக்கின்றனர் அறிவாலயம் & ஆழ்வார்பேட்டை வட்டாரத்தில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+