"பைசன்" வசவாளர்களுக்கு வலி நிறைந்த மடல்!
சென்னை: "நசுக்கப்பட்டோம்.. பிதுக்கப்பட்டோம் என்று புலம்பல்கள்.. இடைவேளைக்கு பிறகு அடங்க மறு, அத்துமீறு காட்சிகள், இடையே நாலைந்து குறியீடுகள்.." இப்படித்தானே இருக்கப்போகிறது மாரி செல்வராஜ் எடுத்த "பைசன் காளைமாடன்" (Bison movie) படமும்.. என்று அங்கலாய்ப்பதை போல காட்டிக்கொண்டு, அடித்து நொறுக்கும் அரசியலை சமூக வலைத்தளங்களில் முன்னெடுத்துள்ளனர்.
இப்படி பதிவுபோடும் பலரும் இடைநிலை ஜாதியினர். தங்களுக்கு கீழே வைத்திருக்க விரும்பும் ஜாதியினர், தங்களுக்கு நேர்ந்த.., அல்ல அல்ல.. நேர்ந்து கொண்டிருக்கும் அநீதிகளை, கலைப் படைப்பாக சமூகத்தின் முன்பாக வைப்பதில் அவர்களுக்கு உவப்பு இல்லை.

"எப்போதோ நடந்த அடக்குமுறைகளை இப்போது பேசுவதா, இப்போதெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள்.." என்றெல்லாம் சொல்லி தங்களையும் ஏமாற்றி சமூகத்தையும் ஏமாற்ற விரும்பும் பதிவர்கள் இவர்கள்.
ஜாதி கொடுமை
தாழ்த்தப்பட்டவர்களுக்கு நடக்கும் அடக்குமுறைகளை பட்டியலிட தேவையில்லை, அது உள்ளங்கை நெல்லிக் கனி. இப்போதும் கூட எத்தனை ஆணவ கொலைகள். ஐயய்யோ. ஆனால், தாழ்த்தப்பட்ட ஜாதியினரிடம் ஜாதி பார்த்து பாகுபாடு பார்ப்பதில்லை என்று நெஞ்சை தட்டிச் சொல்லும் இந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் தங்கள் முதுகை சற்று திரும்பி பார்ப்பது நலம். அடுத்தவர்களுக்காக இல்லை, அவர்களுக்காக. அப்போதுதான், தங்கள் முதுகின் மீது ஜாதியின் கொடுங்கரங்கள் படர்ந்திருப்பதையே அவர்களால் பார்க்க முடியும்.
முதுகை பார்க்கவும்
நாம்தான் இடைநிலை ஜாதியாயிற்றே.. ஆதிக்க ஜாதியாயிற்றே நமக்கு மேலே யார் உட்கார்ந்து நசுக்குகிறார்கள், பிதுக்குகிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் உண்மையல்ல. ஒரே ஜாதிக்குள்ளேயே ஓராயிரம் பாகுபாடு கொண்டதுதான் நமது தாய்த் தமிழ்நாடு. தென் மாவட்ட கதைக் களம் கொண்டது "பைசன்". எனவே உதாரணத்தையும் அங்கிருந்தே எடுப்போம்.
சுய ஜாதி கேட்டகிரி தெரியுமா?
அடக்குமுறைக்கு எதிராக தென் மாவட்டங்களில் பல ஆண்டுகள் முன்பு வெகுண்டெழுந்து, மீண்டு நல்ல நிலைக்கு வந்தது ஒரு இடைநிலை ஜாதி. ஆனால் அதே ஜாதிக்குள் "ஏ", "பி" என பிரித்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்காது.
"ஏ" கேட்டகிரியினர் தங்களுக்குள் மட்டுமே மண உறவு வைக்கிறார்கள். ஒருவேளை வரன் அமையாமல் "பி" கேட்டகிரியினரிடம் சம்மந்தம் வைக்க நேர்ந்தாலும், பெண் எடுத்தாலும் எடுப்பார்களே தவிர, தங்கள் வீட்டு பெண்ணை கொடுப்பதில்லை. அவ்வளவு ஏன்.. கோவில்களுமே தனித் தனிதான். தங்கள் கோவிலுக்கு வரி கொடுத்தால் கூட "ஏ" கேட்டகிரியினர் "பி" கேட்டகிரியினரிடம் வாங்க மாட்டார்களே.. இதில் நான்தான் "ஏ", இல்லை நான்தான் "ஏ" என்ற மோதல்களும் பல உண்டு. ஆனால், தங்களுக்கு மேலே தங்களது ஜாதியினரே கேட்டகிரி பிரித்து உட்கார்ந்து தங்களை மட்டம் தட்டுவதை கடந்து போகும் "பி" கேட்டகிரியினர், இன்னொருபக்கம், தங்களுக்கு கீழாக நினைத்து தாழ்த்தப்பட்டோரிடம் அதிகாரம் காட்டும் அறியாமையை என்னவென்று சொல்ல.
பிரிந்து கிடக்கும் தெருக்கள்
பணத்தால் அல்ல.. பிறப்பாலேயே ஒரே ஜாதிக்குள் இன்னும் இந்த ஏற்றத் தாழ்வு தொடரத்தான் செய்கிறது. தென் மாவட்டங்களில் பல கிராமங்களில் ஒரே ஜாதி வசிக்கும் ஊருக்குள் மேற்குத் தெரு என்று பெயரிடாமல், மேலத் தெரு மற்றும் கீழத்தெரு என பெயரிட்டுக் கொள்வதன் உளவியலும் மேலே-கீழே என்ற ஏற்றத்தாழ்வுதான். மேற்குத் தெருவில் பெரும்பாலும் தங்களை "ஏ" என நினைத்துக்கொள்ளும் பிரிவினர் இருப்பார்கள். அங்கே கிழக்குத் தெருவாசிகள் நிலம் வாங்க முடியாது, வீடு வாங்க முடியாது அல்லவா. இப்படி, தங்களை ஒரு தரப்பு பிதுக்கும்போது இன்னொரு தரப்பை பற்றி பிதுக்கல் வார்த்தை சொல்லி கேலி செய்ய இவர்களால் எப்படி முடிகிறது.
எல்லோருக்குமான படம்
மாரி செல்வராஜ் எடுக்கும் படங்கள் நிஜத்தை பேசுகின்றன. அந்த நிஜம் அடக்கப்பட்டு கிடக்கும் இடைநிலை ஜாதியினருக்கும் பொருந்தக் கூடியதுதான். இது தங்களுக்கான படம், தங்கள் வலியும் இதுதானே என்று இடைநிலை ஜாதியினரும் நினைக்க வேண்டிய படங்கள்தானே. மாரி செல்வராஜ் போன்றோரின் படைப்புகள் யாருக்கானதோ இல்லை, உங்களுக்கானது. ஒவ்வொருவருக்குமானது. தமிழகத்தின் 95 சதவீத ஜாதிகளுக்குமானதுதான். ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் நீங்கள் பிதுக்கப்பட்டு அவமானத்தில்தான் வாழ்கிறீர்கள் என்ற நிஜத்தை உணரும்வரை , மாரி செல்வராஜ்கள் பலர் இந்த மாநிலத்திற்கு தேவைதான். திரையில் வரும் நாயகனை பிற ஜாதிக்காரராக பார்க்காதீர்கள், சுய ஜாதிக்குள் நீங்கள் அனுபவிக்கும் துயரின், பிம்பமாக பாருங்கள். புதிய கோணம் விரிவடையும்.












Click it and Unblock the Notifications