சாப்பிடும் வீட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார் அமைச்சர்.. இன்று இங்கு.. நாளை எங்கயோ! அண்ணாமலை அட்டாக்!
சென்னை : ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சித்தது பற்றி பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சேகர்பாபு சாப்பிடுகிற வீட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பேசுகிறார். இன்றைக்கு திமுகவில் உள்ளார், நாளை எங்கு இருப்பார் என்று தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். காவல்துறை கடுமையாக நடந்து கொள்ளும்போது பாஜக துணையாக இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மாத்தூரில், தமிழக பாஜக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

காவல்துறை கடுமை காட்ட வேண்டும்
அப்போது பேசிய அண்ணாமலை, "மதுரையில் பள்ளி மாணவியின் தந்தையை தாக்கிய வீடியோ காட்சியை பார்த்தபோது நம் சமுதாயம் எந்த அளவிற்கு கெட்டுப் போயிருக்கிறது என்பது தெரிகிறது. தாக்கியவர்கள் எள் அளவு பயம் கூட இல்லாமால், சட்டத்தின் மீது மரியாதை இல்லாமல் பொது இடத்தில் மாணவியின் தந்தையை அடித்துள்ளனர். இது புதிது அல்ல. நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இது அடிக்கொருமுறை நடக்க ஆரம்பித்துவிட்டது. இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால் சாமானிய பெண்கள் ரோட்டில் நடமாட முடியாது.

நாங்க கூட இருப்போம்
சில நேரங்களில் காவல்துறை கடுமையாகத் தான் நடந்துகொள்ள வேண்டும். காவல்துறை கடுமையாக நடந்து கொள்ளும்போது பாஜக துணையாக இருக்கும். இது போன்ற விஷயங்களில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால் நான், நீங்கள் கூட சாலைகளில் செல்ல முடியாது. அதனால் தமிழக அரசு காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். ஓல்டு ஸ்டைல் காவல்துறை தேவை இல்லை. காவல்துறையின் கட்டுகளை அவிழ்த்து விட்டு சில விஷயங்களை தைரியமாக பண்ணச் சொல்ல வேண்டும்.

பாஜக தான் சொன்னது
கோவை வெடிப்பு சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று தெரிய வந்ததற்கு முக்கிய காரணம் பாஜக தான். சிலிண்டர் வெடி விபத்து என்று கூறி அந்த தாக்குதலை மறைக்க நினைத்த திமுகவினை தீவிரவாத தாக்குதல் என்று ஒப்புக்கொள்ள வைப்பதற்கு பாஜகவிற்கு 10 நாட்கள் தேவைப்பட்டது. ஒவ்வொரு ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி பாஜகவே திமுக அரசுக்கு வழிகாட்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் பற்றி அபாண்ட பொய்
மேலும், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது கலவரத்தை தூண்டுவதற்காகத் தான் என அமைச்சர் சேகர்பாபு பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "சேகர்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சி மாறி மாறி வருவார்கள். கட்சிக்கு விசுவாசமாக சில கருத்துக்களை சொல்கின்றனர். கட்சி மாறாமல் இருப்பவனுக்கு மட்டுமே தெரியும் ஆர்எஸ்எஸ் இயக்கம் பற்றி. இந்தியாவில் வட மாநிலங்களில் நடந்த கலவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது ஆர்.எஸ்.எஸ் தான். அது புரியாதவர்கள் ஆர்எஸ்எஸ் மீது அபாண்ட பொய் சொல்கிறார்கள்.

சேகர்பாபு விசுவாசம்
சேகர்பாபு காற்றில் வரும் பட்டத்தை போல கட்சி மாறுபவர். அவர் நெஞ்சை தொட்டுச் சொல்லட்டும். அவர் அதிமுகவில் இருந்த போது திமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று. இன்று சேகர்பாபு சாப்பிடுகிற வீட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பேசுகிறார். இன்றைக்கு திமுகவில் உள்ளார், நாளை எங்கு இருப்பார் என்று தெரியவில்லை. அவர் சொல்வதை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம். திமுகவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்கிறார்." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications