ஆன்மீக உணர்வுகளை புண்படுத்திக்கிட்டே இருக்கீங்க..! திமுக அரசுக்கு எதிராக பாஜக கையில் எடுத்த ‘மூவ்’!
சென்னை : ஆன்மீக உணர்வுகளை திமுக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் தொடர்ந்து புண்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி வரும் பாஜக, திமுக அரசைக் கண்டித்து நாளை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. கோவில்களின் புனிதத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில், அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.

இந்து விரோதப் போக்கு
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் எம்.நாச்சியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் இந்து விரோதப் போக்கைக் கண்டித்தும், தமிழ் மக்களின் ஆன்மீக உணர்வுகளைப் தொடர்ந்து புண்படுத்தும் இந்து சமய அறநிலையத் துறையையும் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அண்ணாமலை தலைமையில்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில், திறனற்ற திமுக அரசிலும், அறமற்ற இந்து சமய அறநிலையத் துறையிலும் தொடர்ந்து அரங்கேற்றி வரும் அவலங்களை எல்லாம் வெளிப்படுத்தும் விதமாக, மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம், ஜனவரி 21ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, நடைபெற இருக்கிறது.

உண்டியல் பணம் சுரண்டல்
* திருக்கோவில் நிலங்கள் எல்லாம் சூறையாடப்படுகிறது.
* திருக்கோயில் மரபுகள் எல்லாம் மீறப்படுகிறது.
* கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது.
* புராதன கோவில் நகைகள் உருக்கப்படுகிறது.
* பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணம் சுரண்டப்படுகிறது.
* பூஜை புனஸ்காரங்கள் நிறுத்தப்படுகிறது.
* பக்தர்களின் வருகைகள் தவிர்க்கப்படுகிறது.
* கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது.
* அறங்காவலர்கள் தக்கார்கள் நியமனங்கள் தடுக்கப்படுகிறது.

புனிதம் கெடுகிறது
மொத்தத்தில் திருக்கோவில்கள் புனிதங்கள் கெடுக்கப்படுகிறது. மத நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இல்லாமல், திருக்கோவிலின் மரபு சார்ந்த விடயங்களில் தலையிட்டு, திறனற்ற திமுக அரசு தொடர்ந்து செய்து வரும் அத்துமீறல்களால், திமுக அரசு பக்தர்களை வஞ்சித்து வருகிறது. இதை வன்மையாக கண்டித்து, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன், இந்து சமய அறநிலையத்துறையின் மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications