இந்த முறை விட்ற கூடாது.. மாறும் அரசியல் கிளைமேட்! ’அவங்களும்’ கூட்டணிக்கு வர்றாங்களாமே! பரபர பாஜக!
சென்னை : வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கடந்த முறை போல கசப்பான தோல்வியை சந்திக்க விரும்பாத பாஜக கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரமாக காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன..
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற பாஜக தலைமை பகீரத பிரயத்தனங்களை செய்து வருகிறது. தமிழகத்தில் தங்களும் ஒரு பெரிய கட்சிதான் என நிரூபிக்க வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைய வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது.
அவர்களோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் என கூறிவரும் சசிகலா ஆகியோரும் சேரும்போது அதிமுக கூடுதல் வலிமை பெறும்.
அமைச்சர் பிடிஆர் செய்வது சரியல்ல.. அதிமுக அரசை விட மோசம்.. முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கடிதம்!
பாஜக தலைமை
இதனை பயன்படுத்தி தமிழகத்தில் குறிப்பிடத் தகுந்த அளவு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என பாஜக தலைமை விரும்புகிறது. ஏற்கனவே இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்தியா முழுவதும் பாஜக பெரு வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் மண்ணை கவ்வியது. இதனால் தமிழக பாஜக தலைமை அடிக்கடி மாற்றப்பட்டது. தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலை உறுப்பினர் சேர்ப்பு, வாக்குச் சாவடி முகவர்கள் நியமனம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என தீவிர அரசியல் செய்து வருகிறார், ஆனால் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை பழைய பாஜகவாகவே இருக்கிறது.
அதிமுக கூட்டணி
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மூலம் நான்கு எம்எல்ஏக்கள் கிடைத்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அதே ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும் என்பது உறுதியாகத் தெரிகிறது. திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என அதிமுக கருதிய நிலையில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுகவுக்கு தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி ஏற்படும்.
பாமக நிலைப்பாடு
இது தவிர தனியரசு, தமீமுன் அன்சாரி, கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்டோரையும் கூட்டணியில் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இப்படி எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வரும் நிலையில் அவர் வழியிலேயே சென்றுவிட பாஜக விரும்புகிறது. பாமகவை பொறுத்தவரை அதிமுக-பாஜக கூட்டணிக்கு வருமா? என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. 2026 தேர்தலை கருத்தில் கொண்டு பாமக வியூகங்கள் இருக்கும் என அன்புமணி பிடி கொடுக்காமல் பேசி வருகிறார்.
தேமுதிக
தற்போதைய சூழலில் பாஜகவின் குறியாக தேமுதிக இருக்கிறது. அக்கட்சி நிறுவன தலைவரான விஜயகாந்த் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக தீவிர அரசியலில் செயல்பட முடியாமல் இருக்கிறார். இதனால் அவரது மனைவியான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் அரசியல் முடிவுகளை எடுத்து வருகின்றனர். கடந்த தேர்தல்களில் தேமுதிக மாறுபாடான கூட்டணி முரணான கொள்கைகள் காரணமாக தேர்தல் பலத்த அடியை சந்தித்தது.
பேச்சுவார்த்தைகள்
கட்சி உருவாக்கப்பட்டபோது உள்ளாட்சித் தேர்தலில் பெருவெற்றியும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தையும் தேமுதிக பெற்றது. அதன் பிறகு எதிர்கட்சியானாலும் அதனை தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் குறிப்பிடத் தகுந்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஓரளவு இருக்கும் தேமுதிக வாக்கு வங்கியை தங்கள் பக்கம் கொண்டு வர பாஜக தலைமை விரும்புகிறது. இதற்காக தேமுதிக தரப்பில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாஜகவுடனோ அதிமுகவுடனோ கூட்டணியில் தற்போது வரை தாங்கள் இல்லை தேமுதிக தனித்து செயல்பட்டு வருகிறது என்று கூறி இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
அணி மாறுமா?
இதனால் பாஜக கூட்டணியில் தேமுதிக வருமா அல்லது திமுகவுடன் கூட்டணி வைக்குமா என்பது குறித்த யூகங்கள் கிளம்பி இருக்கிறது. திமுகவுடன் இதுவரை தேமுதிக கூட்டணி வைக்காத நிலையில் மூன்றாவது அணி சேரும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே கூறியது போல தேமுதிக வாக்கு வங்கி தங்களுக்கு உதவும் என்பதை உணர்ந்துள்ள பாஜக தரப்பு தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.