காலைலயே கண்ணைக் கட்டுதே! கலர் கலரான வாக்குறுதி.. தேதி குறித்த பாஜக அண்ணாமலை! பறந்த அறிக்கை!
சென்னை : குழந்தை முதல் முதியவர் வரை பாமர மக்கள் எல்லாம் பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான பால் விலை ஏற்றத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. விடியல் நேரத்தில் பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32லிருந்து, ரூ.35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேப்போல் எருமைப்பால் கொள்முதல் விலை 41ல் இருந்து 45க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 60 ரூபாயாக மாற்றி அமைத்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இதனால் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.

பால் விலை உயர்வு
இந்நிலையில் விடியல் நேரத்தில் பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது எனவும், பால் விலை உயர்வைக் கண்டித்து பாஜக சார்பில் வரும் 15ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குழந்தை முதல் முதியவர் வரை, பாமர மக்கள் எல்லாம் பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான பால் விலை ஏற்றத்தை பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது.

கண்கள் இருட்டுகிறது
விடியல் நேரத்தில் பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது. விடியலை தருகிறோம் என்று சொல்லிவிட்டு, பால் விலையை உயர்த்தி இருப்பதுதான் மக்கள் விடியலுக்குத் தரும் விலையா? தமிழக அரசின் 'ஆவின்' பால் வழங்கும் நிறுவனம், அதன் நிர்வாக சீர்கேட்டினால், நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையிலே சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வாழ்வாதாரம்
ஏற்கனவே வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பதிவுக்கட்டண உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, என்று அத்தனை வரிகளையும் தாறுமாறாக உயர்த்தி விட்டு, இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படும் பாலுக்கான விலையையும் உயர்த்தி இருப்பது, வாக்களித்த தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். தமிழகத்தில் வரிகள் எல்லாம் ஏறுமுகம், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எல்லாம் ஏறுமுகம், ஆனால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் மட்டும் இறங்கு முகத்தில் இருக்கிறது.

கண்டன ஆர்ப்பாட்டம்
ஆளும் தி.மு.க. அரசு, கலர் கலரான வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, ஆவின் பால் பாக்கெட்களை கலர் கலராக வேறுபடுத்தி கண்டபடி விலையை உயர்த்தி மக்களை துன்பப்படுத்துகிறது. எனவே தி.மு.க. ஆட்சியை கண்டித்து தமிழகத்தின் 1,200 ஒன்றியங்களில் வருகிற 15-ந்தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில், அனைவரும் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications