சீமான் போல் எனக்கும் ஒரு ஆசை.. அதிமுகவை அழிச்சுட்டு வளரனும்னு எண்ணமே இல்லை.. பாஜக அண்ணாமலை தடாலடி..!
சென்னை : அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் கருத்துக்குப் பிறகு அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அதிமுகவை அழித்து தான் பாஜகவை வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல அதிமுக பாஜக இடையேயான கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது உடைந்த பிறகு அவ்வப்போது சச்சரவுகள் மூத்த நிர்வாகிகளிடையே தொடர்ந்து எழுந்து வருகிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் வெளிப்படையாக பாஜக மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்காத நிலையில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் அவ்வப்போது பாஜகவை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

அதிமுக - பாஜக மோதல்
குறிப்பாக அதிமுகவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் வர பாஜக முயற்சிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் அதிமுகவினர். அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தின் போது பேசிய அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி முன்னே வர பாஜக நினைப்பதாகவும், அதனை அதிமுகவினர் தடுக்க வேண்டும் என கூறியிருந்தார் இந்த விவகாரம் பாஜக - அதிமுக இடையே பூதாகரமாக வெடித்தது. ஆனால் அது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக தலைமை கூறியிருந்தது.

கருத்து யுத்தம்
ஆனாலும் பெரும்பாலான அதிமுக உறுப்பினர்கள் பொன்னையனின் கருத்தினை வரவேற்பது போலவே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட செயலாளருமான செல்வராஜ் அதிமுகவின் கூட்டம் கொள்கை கூட்டம் எனவும் பாஜகவுக்கு வருவது காக்கை கூட்டம் என கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பாஜக துணைத் தலைவர்கள் நாகராஜன் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர். ஆனால் அது குறித்து அதிமுக தலைமை தற்போது வரை எவ்வித விளக்கமும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

பாஜக அண்ணாமலை
இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் கருத்துக்குப் பிறகு அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அதிமுகவை அழித்து தான் பாஜகவை வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், "பல முக்கிய மசோதா நிறைவேற அதிமுக எங்களுக்கு துணையாக இருந்தது.

எண்ணம் கிடையாது
அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. 20 சதவீத மக்கள் தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த கருத்தையும் பேசக்கூடாது என கூறியுள்ளோம். அதிமுகவுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது. எங்களது கட்சி குறித்து அதிமுகவினர் சிலர் தவறான கருத்தை கூறினாலும் ஓபிஎஸ், இபிஎஸ் அதை ஏற்க மாட்டார்கள்.

நாம் தமிழர் சீமான்
சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல , பாஜகவை முதலிடம் கொண்டு வர எனக்கும் ஆசை இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான் எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும்" என அண்ணாமலை பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications