ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் பணிமனை படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இருவரும் ஈரோடு தேர்தலுக்கு பணிமனையை அமைத்துள்ள நிலையில், அது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு மீண்டும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இன்னும் சில வரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
ட்விஸ்ட்.. எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசுவின் வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு.. ஏன்? என்ன நடந்தது?
அதிமுக
இருப்பினும், அதிமுகவில் இன்னுமே குழப்பம் ஓய்ந்த பாடில்லை. அதிமுக எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணி என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதேபோல தேர்தல் ஆணையமும் எடப்பாடியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை. இதனால் இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக உள்ளது.
எடப்பாடி தரப்பு
இடைக்கால பொதுச்செயாளர் என்று தான் கையெழுத்திட்டு அனுப்பும் வேட்பாளரை ஏற்க வேண்டும் என்று எடப்பாடி மனுத் தாக்கல் செய்த நிலையில், அதை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்கிறார். அதிமுகவில் இப்படி குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இது ஈரோடு கிழக்கு தேர்தல் களத்திலும் எதிரொலிக்கிறது. ஏற்கனவே இந்தத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று சொன்னார் எடப்பாடி. அதன்படி எடப்பாடி தரப்பில் இருந்து தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் தரப்பு
உடனே ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் செந்தில் முருகன் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரம் கூடவே பாஜக போட்டியிட்டால் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் சேர்த்தே சொன்னார் ஓபிஎஸ். பாஜக தனது நிலைப்பாட்டை எடுக்கத் தாமதம் செய்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பமான ஒரு சூழலே நிலவுகிறது. இதனிடையே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பும் பணிமனைகள் தொடர்பான செய்திகள் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
ஓபிஎஸ் பணிமனை
ஈரோடு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் சார்பில் இன்று காலை ஈரோட்டில் பணிமனை திறக்கப்படுவதாக இருந்தது. ஈரோடு முனிசபல் காலனியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாசறைக் கூடம் என்ற பெயரில் இந்த பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் பன்னீர்செல்வம் தரப்பு பணிமனையில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா படங்கள் இடங்களுக்கு முக்கியத்தவம் தரப்பட்டுள்ளது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை படமும் இதில் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மோடி படம்
இதற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் ஒரு பக்கம் ஆள் உயர ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல மற்றொரு புறம், ஓபிஎஸ் ஆள் உயர படத்துடன் பிரதமர் மோடியின் ஆள் உயர படமும் இடம் பெற்றுள்ளது. அதேபோல பணிமனைக்கு முன்பு அதிமுக கொடியுடன் பாஜகவின் கொடிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த பணிமனை காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட இருந்தது. சென்னையில் ஓபிஎஸை அண்ணாமலை சந்தித்த நிலையில், பணிமனை திறக்கப்படவில்லை. பணிமனை திறப்பு குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி பணிமனை
அதேபோல அங்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பணிமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் பணிமனையைப் போல இல்லாமல் அங்கு பாஜக கொடி அல்லது பாஜக தலைவர்களின் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.. எடப்பாடி பழனிசாமியின் பணிமனையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆள் அளவு படங்களே இடம் பெற்றுள்ளது.
குழப்பம்
முன்னதாக இன்றைய தினம் எடப்பாடி தரப்பு வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வதாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த வாரம் அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. இப்படி இரு தரப்பும் பிரிந்து இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இரு பணிமனைகள் தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.