பாஜக தனித்து போட்டியிடுவதால்.. அதிமுகவில் இணைந்தும், சுயேட்சையாகவும் களம் காணும் பாஜக நிர்வாகிகள்!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளிவந்துள்ள நிலையில் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாநகராட்சிகளிலும், நகராட்சி, பேரூராட்சிகளில், பாஜகவினர் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தும், சுயேட்சையாகவும் பாஜகவினருக்கு எதிராகவே போட்டியிட்டு வருகின்றனர்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகம் இதுவரை சந்தித்திராத வகையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக, பாமக, மநீம, நாம் தமிழர், அமமுக, எஸ்டிபிஐ, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளோடு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்ற விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை நகப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் உள்ளனர். இது மட்டுமல்லாது தங்கள் வார்டுகளில் அதிக செல்வாக்குள்ள பலரும் கட்சிகளில் சீட்டு கிடைக்காததால் சுயேட்சையாக களம் இறங்கி பலம் பொருந்திய அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.

உடைந்த கூட்டணி
திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தமாக ( மூப்பனார்) உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மேயர் பதவி மற்றும் கேட்ட இடங்கள் கிடைக்காததால் பாஜக, கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியேறியது. இதன் காரணமாக தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இதனையடுத்து அக்கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

மல்லு கட்டும் பாஜக
அதிமுக சார்பில் தற்போது பல கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அதில் பல பாஜக பிரமுகர்களின் பெயரும், அவர்களது மனைவி உள்ளிட்ட உறவினர்களின் பெயரும் உள்ளது. குறிப்பாக திண்டுக்கல்லில் வெளியிடப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ள 47 பெயர்களில் ஒரு பாஜக பிரமுகரின் பெயரும், பாஜக முன்னாள் தலைவர் ஒருவரின் மனைவியின் பெயரும் உள்ளது. இதேபோல் தமிழகத்தின் பல இடங்களில் பாஜகவினர் சுயேட்சையாக போட்டியிட்டு வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தமிழகத்தை பொருத்தவரை தனது இடத்தை உறுதி செய்ய பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.

பாஜக வேட்பாளர்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்றத்திற்கு அனுப்பியது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் தற்போது கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அக்கட்சி. ஆனால் கள நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. திண்டுக்கல்லில் மட்டும் 4 பாஜகவினர் தனித்தும், அதிமுகவிலும் பாஜகவுக்கே எதிராக களமிறங்குகின்றனர்.

பாஜக Vs பாஜக கடும் போட்டி
திண்டுக்கல் மாநகர பாஜக முன்னாள் தலைவரான லெட்சுமணன் ஜி என்பவரது மனைவியான வளர்மதி என்பவர் 13வது வார்டில் அதிமுக சார்பில் களமிறங்குகிறார். 14 வார்டில் மாநகர பாஜக முன்னால் துணைத் தலைவராக இருந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர் தனித்து களம் காண்கிறார். அதே 14 வார்டில் பாஜக இளைஞரணி தலைவராக இருந்த தமிழ்வாணன் அதிமுகவில் இணைத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மல்லு கட்டுகிறார். அந்த வார்டில் மட்டுமே 3 பாஜகவினர், பாஜக அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவரும் , முன்னாள் வார்டு உறுப்பினரான தனபாலை எதிர்த்து களம் காண்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பாஜக இளைஞரணியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரவுண்ட்ரோடு பகுதியில் சுயேட்சையாக களம் காண்கிறார்.
Recommended Video

சுயேட்சை வேட்பாளர்கள்
திண்டுக்கல்லில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதே நிலை குறிப்பிட்ட இடங்களில் நீடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றனர். வார்டு பகுதிகளில் கட்சியைத் தாண்டி தனிப்பட்ட செல்வாக்கும் வெற்றியை தேடித் தரும் என்ற நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக பாஜகவினரே களம் இறங்கி வருகின்றனர். கூட்டணியில் இல்லாததால் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் காரணமாகவும், உட்கட்சி பூசல் உள்ளிட்ட காரணங்கள் காரணமாக தனித்து போட்டியிடுவதாக நம்மிடம் பேசிய சில சுயேட்சை வேட்பாளர்கள் கூறியுள்ளனர். தனிப்பட்ட செல்வாக்கு, மக்களிடம் உள்ள அறிமுகத்தை பயன்படுத்தியும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் வெற்றி பெறலாம் எனவும், பல கட்ட யோசனைகளுக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் நம்மிடம் பேசிய நிர்வாகிகள், வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications