"உங்களுக்கு தகுதி இல்லை.. உங்க அட்வைஸ் தேவையும் இல்லை" சி.வி.சண்முகத்திற்கு பாஜக நாராயணன் பதிலடி
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னது சர்ச்சையான நிலையில், இதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசுக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கும் எதிராக அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கும் என அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. இதனிடையே இதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

சிவி சண்முகம்
கடலூரில் நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் என்எல்சிக்கு நிலம் தந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரி அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்பியுமான சி.வி. சண்முகம், "மத்திய பாஜக அரசு சொல்லும் அத்தனை வேலைகளையும் திமுக தலையில் தூக்கி வைத்துச் செய்து கொடுக்கிறது. என்எல்சி விவகாரத்திலும் கூட அதே தான் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் போது திமுகவினர் மத்திய விமர்சிக்கிறார்கள்.

திமுக பாஜக கூட்டணி
ஆனால், டெல்லிக்குப் போனால், அப்படியே மாறிவிடுகிறார்கள். மத்திய அரசிடம் கெஞ்சுகிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கப் போகிறது. இப்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள அனைவரும் ஓடப் போகிறார்கள். ஒன்று எங்களுடன் கூட்டணிக்கு வாங்க.. இல்லைன காங்கிரஸைக் கழட்டி விடுங்க என்பதே பாஜகவின் நிபந்தனையாக உள்ளது. தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவியும் தருவதாக பாஜகவிடம் திமுக சொல்லியுள்ளது" என்று கூறினார்.

சர்ச்சை
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சி.வி. சண்முகம் வெளிப்படையாக திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், தனது பேச்சு குறித்து சி.வி.சண்முகம் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. இந்தச் சூழலில் அவரது பேச்சை பாஜகவின் பல்வேறு தலைவர்களும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.

நாராயணன் திருப்பதி
இது தொடர்பாக மாநில பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில், "அஇஅதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சண்முகம், பாஜகவுடன் திமுக கூட்டணி வரும் என்றும், திமுகவும் பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை எங்கள் தலைவர் அண்ணாமலை தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாகப் போராடி வருகிறது.

தகுதி இல்லை
பாரதிய ஜனதா கட்சி எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்குத் தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை.. மேலும், காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்றெல்லாம் 'நிதானமில்லாமல்' பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் பாஜக குறித்த விமர்சனங்களைத் தவிர்ப்பார் என்று கருதுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை
முன்னதாக இந்த விவகாரம் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "சி.வி.சண்முகம் பாஜகவில் இணைந்துவிட்டரா என்ன எனத் தெரியவில்லை. யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்துச் சம்மந்தப்பட்ட கட்சியில் உள்ளவர்கள் மட்டுமே பேச வேண்டும். இப்படியெல்லாம் வரும் யூகங்களுக்கு என்னால் பதில் கூற முடியாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications