Exclusive: கமல்ஹாசனை நினைத்தால் பாவமாக இருக்கிறது.. போட்டு தாக்கும் பாஜக சரவணன்
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு அம்னீசியா வியாதி வந்துவிட்டது என நினைக்கிறேன் என்று மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் விமர்சித்துள்ளார்.
நடிகர் கமலை நினைத்தால் தனக்கு பாவமாக இருப்பதாகவும் மக்கள் தன்னை அரசியலில் புறக்கணித்து மீண்டும் சினிமாவில் ஆட வைத்து விட்டதாக அவர் விக்ரம் பட பாடலில் புலம்பியுள்ளதாக கூறியிருக்கிறார்.
விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் தொடர்பாக பாஜகவின் டாக்டர் சரவணனனிடம் நாம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;
அடடே ஆச்சரியம்! திமுகவின் 'ஒன்றிய அரசு' முழக்கத்தை விக்ரம் படத்தில் பாட்டாவே பாடிட்டாரே கமல்ஹாசன்!
கமல் நல்ல நடிகர்
''கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் ஒரு நல்ல நடிகர். ஆனால் அவர் இப்படி ஆவார் என எதிர்பார்க்கவே இல்லை. கமல் நடிப்பில் வெளியான வெற்றிவிழா என்ற
திரைப்படத்தில் அவருக்கு அம்னீசியா என்ற வியாது வரும். இன்று நிஜத்தில் அதுபோல் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். உலகின் மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனா காய்ச்சலை தடுக்கும் பணியில் முழுத் தீவிரமாக செயல்பட்டு அதை இன்று கட்டுப்படுத்தியும் வைத்திருப்பது மத்திய அரசு தான்.''
பாவமாக உள்ளது
''அவருக்கு உண்மையிலேயே அம்னீசியா இல்லையென்றால் காய்ச்சல் ஜுரம் நிறைய வருது தில்லாலங்கடி தில்லேலே என்று குறிப்பிட்டிருக்க மாட்டார். அதேபோல் அந்தப் பாடலில் கஜானாவிலும் காசு இல்லை கல்லாவிலும் காசு இல்லை எனக் கூறியிருக்கிறார் கமல். இவரை போன்றவர்கள் வரி பாக்கி வைக்காமல் வரியை
செலுத்தினால் தானே கஜானா காலியாகாது. இதனால் கமல்ஹாசனை நினைத்தால் எனக்கு
பாவமாக இருக்கிறது.''
விளம்பரம் நோக்கில்
''என்னை பொறுத்தவரை கமல்ஹாசன் தனது விளம்பரப்படுத்தும் நோக்கில் இது போன்ற
வரிகளை தனது திரைப்பட பாடலில் சேர்த்துள்ளார். நாங்கள் அவருக்கு விளம்பரம்
தேடி கொடுக்க மாட்டோம். இன்னொரு விஷயத்தை நீங்கள் பார்க்க வேண்டும், சாவி
இப்போ திருடன் கையில என கமல் கூறுவதை பாஜகவை பார்த்து அல்ல. அது திமுகவை நோக்கி அவர் கூறுவது. ஏனென்றால் இப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கிறது. அதைத்தான் அவர் இப்படி குறிப்பிட்டிருப்பார் என நினைக்கிறேன்.''
மக்கள் புறக்கணித்தனர்
''அரசியலில் கமல்ஹாசனை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள், அந்தக் கோபம் அவருக்கும் இன்னும் உள்ளது. அதன் வெளிபாடாக தான் சினிமா மூலம் மக்கள் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் கமல். விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் குறித்து மேலும் பேசி அவருக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை.''
சர்ச்சைக்குரிய வரி
நடிகர் கமல் நடிப்பில் திரைக்கு வரவுள்ள விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. அதில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல
இப்பாலே, சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே என்ற வரிகள்
இடம்பெற்றிருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசை சூசகமாக கமல் சாடுகிறாரோ என
விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் பாஜக சார்பில் அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் முதல் ஆளாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.