"திமுகவின் நாடகங்கள்" அக்.27ல் தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை அறிவிப்பு!
சென்னை: திமுக அரசைக் கண்டித்து அக்டோபா் 27ல் பாஜக சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில தலைவா் அண்ணாமலை அறிவித்துள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில்,தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின்
இதற்கு பாஜக தரப்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியை எதிர்க்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தி படங்களை வாங்கி தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வது ஏன் என்று காட்டமாக கேள்வி எழுப்பியதோடு, திமுகவினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திமுகவின் நாடகம்
அதேபோல் திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போது எல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும் என்றும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாக கூறினார்.

அக்.27ல் ஆர்ப்பாட்டம்
இதனால் அடுத்த சில நாட்களில் திமுகவை கண்டித்து பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும், அந்தப் போராட்டத்தில் திமுகவினரின் நாடகத்தை வெளியிடுவோம் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் வரும் அக்டோபர் 27ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை ட்வீட்
இது தொடா்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் அக்டோபா் 27-இல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்று கூறியுள்ளாா். ஹிந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக அரசு தீா்மானம் நிறைவேற்றியிருந்தது. அதை கண்டிக்கும் வகையில் இந்தப் போராட்டத்தை அண்ணாமலை அறிவித்துள்ளாா்.












Click it and Unblock the Notifications