பேரறிவாளனை விடுதலை செய்ய கூடாது- இலங்கைக்கு நாடு கடத்தனுமாம்.. ட்வீட் போட்டு டோஸ் வாங்கும் சு.சுவாமி
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அவரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருவதுடன் ராஜீவ் காந்தி படுகொலையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு உள்ள தொடர்பு குறித்து ஜெயின் கமிஷன் எழுப்பிய சந்தேகங்களையும் பட்டியலிட்டு விமர்சித்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால் தமிழக ஆளுநரோ இதனை ஏற்க மறுத்து ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
ராஜீவ் கொலை வழக்கு:30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதே தீர்வு-உச்சநீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலையாகிறார்
இந்நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது பேரறிவாளனை ஜாமீனில் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை, நன்னடத்தை உள்ளிட்டவைகள் அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு கெடு
ஆனால் பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் வரும் 10-ந் தேதிக்குள் முடிவெடுத்தாக வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிடும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மாநில அரசின் முடிவுகளை தடுத்து வைக்கும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.
சு.சுவாமி சர்ச்சை ட்வீட்
இந்த பின்னணியில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். அதில், விடுதலைப் புலிகளின் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் கருணை அளித்தால் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும். 1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பேரறிவாளன் இணைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மேலும் ஒரு கருணை காட்டி பேரறிவாளனை விடுதலை செய்யப் போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நெட்டிசன்கள் கோபம்
சுப்பிரமணியன் சுவாமி இன்று காலை இந்த பதிவை போட்டது முதலே கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். ராஜீவ் கொலை குறித்து விசாரித்த ஜெயின் கமிஷன் ஆணையம், சுப்பிரமணியன் சுவாமி மீது சந்தேகம் எழுப்பியிருக்கிறது; இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புக்கும் சு.சுவாமிக்குமான தொடர்பு குறித்து கேள்வி கேட்டுள்ளது என பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் பேரறிவாளன் இலங்கையை சேர்ந்தவர் அல்ல என்பதை ஏன் சுப்பிரமணியன் சுவாமி தெரிந்து கொள்ளவில்லை எனவும் நெட்டிசன்கள் வறுக்கின்றனர்.