விஜய் ஷூட்டிங்கை எப்படி என்எல்சியில் நடத்தலாம்.. 10, 15 பாஜகவினர் போராட்டம்- தடியடி நடத்தி கலைப்பு
சென்னை: நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வரும், நெய்வேலி என்எல்சி சுரங்கம் பகுதியில் பாஜகவினர் போராட்டம் 15 பாஜகவினர் நடத்தினர். அவர்களை தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள், இங்கிருந்துதான், நேற்று முன்தினம் விஜயை காரில் சென்னை அழைத்துச் சென்றனர். சுமார் 23 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதன்பிறகு, இன்று விஜய் நெய்வேலி திரும்பினார்.
இன்று விஜய் சூட்டிங் திரும்பியபோது, படக் குழு ஆரவார வரவேற்பு அளித்து, அவரை வரவேற்றனர். இதையடுத்து உற்சாகமாக சூட்டிங் மறுபடியும், துவங்கியது.
நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்
மாஸ்டர் படம் கடந்த 1ம் தேதி முதல் கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது எனத் தெரிகிறது. ஆனால், வருமான வரித்துறையினர் இங்கே வந்த பிறகுதான், பலருக்கும் நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்ததே தெரியும். இந்த நிலையில்தான், என்.எல்.சி. 2வது சுரங்கம் முன்பாக, பாஜகவினர் சுமார் 10 பேர் திடீரென வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
கோஷங்கள்
முறையான பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே சுரங்கப் பகுதியில் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. இவர்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?, பிறரும் உள்ளே போக வாய்ப்புள்ளதே, ஏன் அனுமதி வழங்கினீர்கள் என பாஜகவினர் கேள்வி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை, சுரங்க நிர்வாகம் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினருக்கு மட்டுமே சூட்டிங் நடப்பது தெரியும். வருமான வரித்துறையினர் இங்கு வந்த பிறகுதான், சூட்டிங் நடப்பதே பலருக்கும் தெரியவந்தது. அந்த அடிப்படையில்தான், இப்படி போராட்டம் நடத்துவதாக கூறப்படுகிறது.
சூட்டிங்கால் ஆபத்து
பாஜகவை சேர்ந்த நிர்வாகியும், போராட்டக்காரருமான, தேவ சரவண சுந்தரம் இதுபற்றி கூறுகையில், இந்த சுரங்கத்திற்கே, இந்த சூட்டிங்கால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இங்கு சூட்டிங் என்ற பெயரில், யார் வேண்டுமானாலும் ஊடுருவக் கூடும். இதற்கு பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இங்கு சூட்டிங் நடத்த அனுமதித்தது தவறான செயல். இதுகுறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். தகவல் சொல்லிவிட்டோம் என்பதற்காக, கையைகட்டிக் கொண்டு தவறு நடப்பதை வேடிக்கை பார்க்க கூடாது. இங்கு சூட்டிங் நடத்த அனுமதித்தது பெரும் தவறு. இவ்வாறு அவர் தெரிிவித்தார்.
தடை இல்லை
அதேநேரம் 1ம் தேதி முதல் 10ம் தேதிவரை நெய்வேலியில் சூட்டிங் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கு முறைப்படி அனுமதி வாங்கியுள்ளோம். ஏற்கனவே பல சூட்டிங்குகள் இங்கு நடந்துள்ளன என்கிறார்கள் திரைப்பட குழுவினர். பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் மாஸ்டர் சூட்டிங்கிற்கு தடை ஏதும் ஏற்படவில்லை. சுரங்கத்தின் வெளியேயே, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தடியடி நடத்தி விரட்டியடிப்பு
தொழில் பாதுகாப்பு படையினரை மீறி பாஜகவினர் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர் பாதுகாப்பு படையினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய பாஜவினர் அங்கிருந்து வெளியேறினர்.