"கொங்குநாடு"... தமிழ்நாட்டை அவ்வளவு ஈசியாக பிரித்து விட முடியுமா.. சாத்தியங்கள் இருக்கிறதா?
சென்னை: கொங்குநாடு என தனி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்க முயற்சிக்கிறதா? என்கிற விவாதம் களைகட்டி வருகிறது. ஆனால் கொங்குநாடு தனி மாநில கோரிக்கை வலிமையாக எழாத நிலையில் இதற்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Recommended Video
நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே மாநில பிரிவினைகளுக்கான முழக்கங்கள் இருந்து வருகின்றன. தென் மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாடு கோரிக்கையை ஒரு காலத்தில் இன்றைய தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு முன்வைத்திருந்தது.
வட இந்தியாவில் இன்னமும் பல தனி மாநில கோரிக்கைகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசால் தென்னிந்தியாவில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. முன்னதாக வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

புதிய தனி மாநிலங்கள்
மத்தியில் 2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதலே ஒட்டுமொத்த மாநிலங்கள் அமைப்பு முறையே மாற்றப்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் கொண்டுவரப்படலாம் என்கிற அச்சமும் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் பா.ஜ.க. அரசு இதுவரை அப்படியான எந்த ஒருமுயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் வடக்கு மேற்கு வங்கம், கொங்கு நாடு என தனி மாநிலங்களை அல்லது யூனியன் பிரதேசங்களை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்க முயற்சிக்கிறதா? என்கிற விவாதங்கள் எழுந்துள்ளன.

வடமேற்கு வங்க மாநிலம்?
வடக்கு மேற்கு வங்கம் தனி மாநில கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தும் ஜான் பர்லேவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு மேற்கு வங்க தனி மாநில கோரிக்கைக்கு மத்திய பா.ஜ.க. அரசு ஆதரவு தருகிறதா? என்கிற கேள்வியை மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எழுப்பி இருக்கிறது. ஆனாலும் மேற்கு வங்க பா.ஜ.க. இந்த தனி மாநில கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது.

கொங்கு நாடு மாநிலம்?
அதேபோல் மத்திய இணை அமைச்சராக தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் நியமிக்கப்பட்டார். எல். முருகன் பற்றிய மத்திய அரசின் குறிப்பில் கொங்குநாடு என குறிப்பிட்டிருந்தது. இதுதான் இப்போது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொங்குநாடு தனி மாநில பிரிவினை கோரிக்கை இருக்கத்தான் செய்கிறது. மறைந்த கோவை செழியன் இந்த கோரிக்கையை வலிமையாக முன்னெடுத்தார். தற்போதும் திமுக கூட்டணியில் ஈஸ்வரன் தலைமையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றிருக்கிறது.

திணிக்க முடியாது?
இருந்தபோதும் கொங்குநாடு தனி மாநில கோரிக்கைகான போராட்டங்கள் வீச்சாக முன்னெடுக்கப்பட்டது இல்லை. தெலுங்கானா தனி மாநிலம் கோரி மிக தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றதால் அது சாத்தியமானது. ஆனால் கொங்குநாடு தனி மாநில கோரிக்கை என்பது பேச்சளவில்தான் இருக்கிறது. நடைமுறையில் கொங்கு பகுதி மக்கள் அதை வலியுறுத்தி ஒரு இயக்கமாக தீவிரமாக முன்னெடுக்கவில்லை. இந்த நிலையில் கொங்குநாடு என்கிற தனி யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு தன்னிச்சையாக திணிக்க முடியாது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

தமிழகமும் பிரிவினை கோரிக்கைகளும்
அதேநேரத்தில் தமிழகத்தில் நீண்டகாலமாகவே வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது. தென் தமிழ்நாடு மாநில பிரிவினை கோரிக்கைக்கான இயக்கங்கள் நடத்தப்பட்டன; இன்று பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வட தமிழ்நாடு எனும் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தியதும் உண்டு. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு மாநில பிரிவினைக்கான கோரிக்கையும் குரலும் எழவில்லை.

பாஜகவின் அரசியல் திட்டம்?
இருப்பினும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வலிமையாக காலூன்ற முடியாத ஒரு மாநிலமாக ஒருங்கிணைந்த தமிழகம் இருக்கிறது. ஆகையால் அரசியல் ரீதியாக பா.ஜ.க. சாதிக்க நினைத்தால்தான் தமிழகம் என்கிற மாநிலத்தை தனித்தனி மாநிலங்களாக, யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முடியும். தற்போதைய நிலையில் அதுவும் மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெறாத நிலையில் உடனடியாக கொங்கு மாநிலம் உருவாக்கப்படும் என்பதற்கு சாத்தியங்கள் மிக மிக குறைவு என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications