பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒரு வியூகம்... அதை வெளியில் சொல்ல முடியாது.... வி.பி.துரைசாமி பேட்டி
சென்னை: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தமிழர் நலனைப் போற்றும் வகையிலான அறிவிப்புகள் இருக்கும் என்றும் தனது அனுபவத்தையும் சமூகத்தையும் மனதில் வைத்துக்கொண்டு பாஜக தனக்கு உரிய மரியாதை செய்யும் என நம்புவதாகவும் வி.பி.துரைசாமி ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திமுகவின் 1989-91 மற்றும் 2006-11 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு துணைச் சபாநாயகராக இருந்தவர் வி.பி.துரைசாமி. திமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த இவர், ராஜ்ய சபாவிலும் எம்பியாக இருந்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்குத் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாஜகவில் அரசியல் பயணம்
தனது அரசியல் பயணம் குறித்தும் திமுக குறித்தும் வி.பி.துரைசாமி பல்வேறு கருத்துகளை ஒன் இந்தியா தளத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார். பாஜகவில் தனது அரசியல் பயணம் சிறப்பாக உள்ளதாகவும் இந்தத் தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வழங்கவில்லை என்ற வருத்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பாஜகவில் இணையும்போதே, எந்தவொரு பதவியையும் பொறுப்பையும் எதிர்பார்த்து வரவில்லை என்றும் அவர் கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கை
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை எல்லாம், மாநிலச் சட்டசபையில் நிறைவேற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை முழுவதும் வலியுறுத்தப்படும், கேட்டுக் கொள்ளப்படும் என்ற வாசகங்களே நிறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒரு இணக்கமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக தேர்தல் அறிக்கை
பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தேர்தல் அறிக்கை என்பது வியூகம்; எனவே பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து இப்போது வெளியே சொல்ல மாட்டோம் என்றார். மேலும் திருக்குறளை முன்னிறுத்தி, அதை உலகெங்கும் பிரபலப்படுத்தப் பிரதமர் மோடி தேவையான முயற்சிகளை எடுப்பார் என்றும் தமிழர்கள் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை மதிக்கும் வகையிலும், போற்றும் வகையிலும் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
உரிய மரியாதை கிடைக்கும்
பாஜகவில் தனக்கு உரிய இடமும் மரியாதையும் கொடுப்பதால் ஒருநாளும் திமுகவில் இருந்து அவரசப்பட்டு வெளியேறிவிட்டுமோ என்று எண்ணியதில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பாஜக ஒரு தேசிய கட்சி என்பதால் தனது அனுபவம், வயது, சமுதாயம் ஆகியவற்றை மனதில் வைத்துக்கொண்டு பாஜக சரியான நேரத்தில் உரியதை செய்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். மேலும், அருந்ததியின சமுதாய மக்களிடையே திமுக குறித்துத் தான் பொய் பிரசாரம் மேற்கொள்வதாக அந்தியூர் செல்வராஜ் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த அவர், திமுகவிலேயே அந்தியூர் செல்வராஜிடம் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவருக்காகவும் தான் குரல் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications