Delimitation: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! ஸ்டாலின், கனிமொழி, கமல் வீடுகளில் கருப்புக் கொடி!
சென்னை: தொகுதி மறுவரையறையை கண்டித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, கமல்ஹாசன் ஆகியோரின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறை, மகளிருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை வீடு, கனிமொழியின் சிஐடி காலனி வீடு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீடு ஆகியவற்றில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
அது போல் முதல்வர் ஸ்டாலின் நாமக்கல்லில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இந்த நிலையில் நாமக்கல்லில் திமுக நிர்வாகிகளுடன் கருப்புக் கொடி போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கருப்பு உடை அணிந்திருந்தார். மேலும் தொகுதி மறுவரையறை சட்ட திருத்த மசோதாவின் நகலை எரித்தார்.
அப்போது ஒன்றாக வெல்வோம் என கோஷங்கள் எழுந்தன. தொகுதி மறுவரையறைக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஏன் எதிர்ப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று, மக்கள் தொகை கட்டுப்பாட்டு முறைகளை மிகச் சிறப்பாக அமல்படுத்தி வருகின்றன.
இப்போது தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு நாடாளுமன்ற இடங்கள் அதிகமாகும்.
கட்டுப்பாட்டை சிறப்பாகக் கடைபிடித்த தமிழகத்திற்கு இடங்களின் விகிதாச்சாரம் குறையும். இதை முதல்வர் ஸ்டாலின் "சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குத் தரப்படும் தண்டனை" என்று கடுமையாக விமர்சிக்கிறார்.
புதிய கணக்கீட்டின்படி, நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் (உதாரணமாக 543-லிருந்து 850 வரை) அதிகரிக்கப்பட்டாலும், அதில் தென்மாநிலங்களின் பங்களிப்பு குறையும்.
இதனால் மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தி சில பெரிய வடமாநிலங்களிடம் மட்டுமே சென்றுவிடும்.
தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களின் அரசியல் குரல் டெல்லியில் வலுவிழந்துவிடும் என்ற அச்சத்தை அவர் முன்வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல், ஒரு தீர்வாக 'ஹைப்ரிட் மாடல்' முறையைப் பரிந்துரைக்கிறார். தொகுதிகளைப் பிரிக்கும்போது வெறும் மக்கள் தொகையை மட்டும் பார்க்காமல், ஒரு மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பு (GSDP) மற்றும் வளர்ச்சிக் குறியீடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார்.
நிதிப் பங்களிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழகத்திற்கு அரசியல் அதிகாரத்திலும் சரியான பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதே அவர் வாதமாகும்.
இந்த மறுவரையறையால் உத்தரப்பிரதேசத்திற்கு 140 சீட்களும், பீகாருக்கு 73 லோக்சபா சீட்களும் ராஜஸ்தானுக்கு 48, மத்திய பிரதேசத்திற்கு 51 சீட்களும். மகாராஷ்டிராவிற்கு 79 சீட்களும் கிடைக்கும். அதிக சீட் கிடைக்கும் மாநிலங்களில் இவர்கள்தான் டாப்!
அது போல் தமிழகத்தில் 39 ஆக இருந்த லோக்சபா சீட்கள் தொகுதி மறுவரையறையால் 51 ஆக மாறும். கேரளாவுக்கு 23 ஆகவும் ஆந்திரா+ தெலுங்கானாவுக்கு 59 ஆகவும் ஒடிஸாவுக்கு 29 ஆகவும் மேற்கு வங்கத்திற்கு 64 ஆகவும் மாறும். அதிக பாதிப்புகளை சந்திக்கும் டாப் மாநிலங்கள் இவைகள் ஆகும்.














Click it and Unblock the Notifications