அனைத்து மக்களுக்கான பட்ஜெட்.. நடுத்தர வர்க்கத்தினருக்கு வரப் பிரசாதம்! பாயிண்டுகளை அடுக்கிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 - 2026 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். இதில் தனி நபர் வருமானம் ஆண்டுக்கு 12 லட்சம் வரை இருந்தால் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது அனைத்துத் தரப்பு மக்களுக்குமான, தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் என பாராட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இன்றைய தினம், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வழிகாட்டுதலின்படி, 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

budget 2025 nirmala sitharaman annamalai 2025

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி" என்ற அற்புதமான திருக்குறளை மேற்கோள் காட்டி, நமது மாண்புமிகு நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழில்துறையினர், இளைஞர்கள், தாய்மார்கள், மாணவர்கள் என, அனைத்துத் தரப்பினருக்குமான மிக அற்புதமான, பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் சிலவற்றை, தமிழக மக்கள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

வருமான வரி உச்சவரம்பு

ஆண்டுக்கு, ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது என்ற நமது நிதியமைச்சரின் அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. இத்துடன், ரூ. 75,000 நிலையான வரி விலக்குடன் சேர்த்து, இனி ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை. இதன் மூலம், நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான, வரி விலக்கு உச்சவரம்பு ₹ 50,000 த்திலிருந்து 1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்ற அறிவிப்பு, மூத்த குடிமக்களுக்கு மிகவும் ஆதரவானதாக அமைந்துள்ளது.

விவசாயிகள் நலன்

நமது மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், பிரதம மந்திரி தன்-தான்யா க்ரிஷி யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 100 பின்தங்கிய விவசாய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, விவசாயிகளின் விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பை அதிகரிக்கவும், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு கிடைக்கும் கடனை மேம்படுத்தவும், பணிகள் நடைபெறும்.

மேலும், கிசான் கடன் அட்டைகள் (KCC) மூலம், 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்தொகை உச்சவரம்பு, மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

தொழில்துறை

நமது நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் சுமார் 7.5 கோடி பொதுமக்கள் பணிபுரிகிறார்கள். இந்த நிறுவனங்கள் நாட்டின் ஏற்றுமதியில் 45% உற்பத்தியில் 36% பங்களிப்பும் வழங்குகின்றன.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு மற்றும் வருமான வரம்பு உயர்த்தியிருப்பது, சிறு, குறு. நடுத்தர நிறுவனங்கள், தொய்வின்றி செயல்பட்டு, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ரூ.1 கோடி முதலீடு வரை சிறு நிறுவனங்களாக இருந்தவை, இனி ரூ.2.5 கோடி வரையும், அதே போல, ரூ.10 கோடி முதலீடு வரம்பில் இருந்த குறு நிறுவனங்கள், இனி ரூ.25 கோடி வரையும், ரூ. 50 கோடி முதலீடு வரம்பில் இருந்த நடுத்தர நிறுவனங்கள் இனி ரூ.125 கோடி வரையும் முதலீடு செய்யலாம் என்றும், இவற்றின் வருமான உச்சவரம்பு முறையே, ஆண்டு வருமானம், ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடியாகவும், ரூ. 250 கோடியிலிருந்து 1.500 கோடியாகவும் அதிகரித்திருப்பதன் மூலம், தொழில்துறையினர் மிகுந்த பலனடைவார்கள்.

இந்த நிறுவனங்கள் கடன்களைப் பெறுவதை எளிதாக்கவும். கடன் உத்தரவாதக் காப்பீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டும், சிறு, குறு நிறுவனங்களுக்கு, 5 கோடியிலிருந்து ₹10 கோடியாக அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் ரூ.10 கோடியிலிருந்து 15.20 கோடியாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பும், தொழில்துறையில் ஒரு புரட்சியாகவே அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. மேலும், மத்திய அரசின் உதயம் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறு நிறுவனங்களுக்கு, ரூ.5 லட்சம் வரம்புடன் கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், முதல் ஆண்டில் 10 லட்சம் நிறுவனங்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் மிகவும் வரவேற்கத்தக்கவை.

மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தற்போதுள்ள ₹10,000 கோடி மத்திய அரசு நிதியுடன், கூடுதலாக ₹10,000 கோடி புதிய நிதியுதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு, இளைஞர்களைத் தொழில்முனைவோராக்க உத்வேகம் அளிக்கும்.

மேலும், முதல் முறை தொழில்முனைவோராகும் 5 லட்சம் பெண்கள், பட்டியல் சமூக மக்கள், மற்றும் பழங்குடியினருக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் வரை கடனுதவி மற்றும் தொழில்முனைவோர் மற்றும் நிர்வாகத் திறன்களுக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சமூக நீதிக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

budget 2025 nirmala sitharaman annamalai 2025

தோல் தொழில்கள்:

இந்தியாவின் காலணி மற்றும் தோல் துறையின் உற்பத்தித்திறன், தரத்தினை மேம்படுத்த, காலணி மற்றும் தோல் துறைகளுக்கு. பிரேத்யேக தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ரூ.4 லட்சம் கோடி வருவாய் மற்றும் 1.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி நடைபெற வாய்ப்பு உள்ளது.

ஜவுளித்துறை:

வேளாண்-ஜவுளி, மருத்துவ ஜவுளி மற்றும் ஜியோ ஜவுளி போன்ற தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட ஜவுளி இயந்திரங்களின் பட்டியலில் மேலும் இரண்டு வகையான ஷட்டில்-லெஸ் சேர்க்கப்பட்டுள்ளதும், பின்னலாடைகளுக்கான வரி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், 9 வகையான சுங்க வரி விகிதங்களை நீக்கிவிட்டு, ஒரு கிலோவிற்கு 20% அல்லது ரூ.115, இதில் எது அதிகமாக இருக்கிறதோ அது மட்டுமே சுங்க வரியாக விதிக்கப்படும்.

உயிர்காக்கும் மருந்துகள்:

அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில், மேலும் உயிர்காக்கும் மருந்துகள் சேர்க்கப்படும். மேலும் 36 6 உயிர்காக்கும் மருந்துகள், 5% சுங்க வரி விலக்குப் பட்டியலில் சேர்க்கப்படும், 37 மருந்துகள் மற்றும் 13 புதிய நோயாளி உதவித் திட்டங்களும், அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் மூலம், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் கணிசமாகக் குறையவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விலை

budget 2025 nirmala sitharaman annamalai 2025

கல்வித் துறை:

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அரசு, கடந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1.1 லட்சம் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி இடங்களைச் சேர்த்துள்ளது. இது முன்பை விட 130% அதிகமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75,000 மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கும் இலக்கை நோக்கி, அடுத்த ஆண்டில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், கூடுதலாக 10,000 இடங்கள் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், நமது குழந்தைகளுக்கான மருத்துவக் கல்வி வாய்ப்பு, பல மடங்கு அதிகரிக்கும்.

ஆராய்ச்சிக் கல்வி:

அடுத்த ஐந்து ஆண்டுகளில், பிரதமர் ஆராய்ச்சி பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், ஐஐடிகள் மற்றும் ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில், தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக பத்தாயிரம் பெல்லோஷிப் வாய்ப்புகள், மேம்பட்ட நிதி உதவியுடன் வழங்கப்பட உள்ளது என்ற அறிவிப்பும், மாணவர்களிடையே, ஆராய்ச்சி உணர்வைத் தூண்டுவதற்கும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில், ஐம்பதாயிரம் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவ சமுதாயத்திற்கு, மிகவும் பயனுள்ள அறிவிப்பாக அமைந்துள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடு:

மாநிலங்களின் உள்கட்டமைப்பு மூலதனச் செலவினங்களுக்காக, 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்களுக்காக, ரூ. 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும், நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுசீரமைப்பு மற்றும் 'நீர் மற்றும் சுகாதாரம்' ஆகியவற்றுக்கான திட்டங்களை செயல்படுத்த 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம், பரவலான வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் 120 நகரங்களில் விமான இணைப்பை மேம்படுத்தி, 4 கோடி பயணிகள் பயன்படும் வண்ணம், மாற்றியமைக்கப்பட்ட உதான் திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு, நகரங்களிடையே போக்குவரத்து இணைப்பை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

மேலும், தங்குமிடங்கள் அமைப்பதற்கு முத்ரா கடனுதவி, கடல்சார் தொழில்துறைக்கு நீண்டகால நிதியுதவி செய்வதற்காக ₹25,000 கோடி நிதியுடன் கூடிய கடல்சார்

நிதி, குழாய் மூலம் குடிநீர் திட்டம் 100% நிறைவுபெற, 2028 ஆம் ஆண்டு வரை ஜல் ஜீவன் திட்டம் நீட்டிப்பு, மாநிலங்களுடன் இணைந்து, நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் உருவாக்கம், மருத்துவச் சுற்றுலா துறையை மேம்படுத்தல் என, பல துறையினரும் பயன்படும்படி, பல சிறந்த திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, அனைத்துத் தரப்பு மக்களுக்குமான, தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கனவான, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய மிகச் சிறந்த பட்ஜெட்டை நாட்டுக்கு வழங்கியிருக்கும் நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும், மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+