போலாம் ரைட்.. தமிழ்நாட்டில் மீண்டும் பஸ் சேவை.. இந்த வாரமே வெளியாகிறது அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் சேவையை துவக்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தினசரி பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவையும் தாண்டி பயமுறுத்தியது.
இதையடுத்துதான் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இப்போது நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு
இருப்பினும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய்த்தொற்று சற்று அதிகமாக இருக்கிறது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது. எனவேதான் கடந்த 14ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களுக்கு குறைவான தளர்வுகளும், 27 மாவட்டங்களில் கூடுதலான தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. டாஸ்மாக் திறப்பு , சலூன் கடைகள் திறப்பு உள்ளிட்ட சலுகைகள் 27 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சில சலுகைகள் பெண்டிங்
பள்ளிகள் திறப்பது, பொதுப்போக்குவரத்தை இயக்குவது, இ பாஸ் இல்லாமல் அல்லது இ-பதிவு இல்லாமல் வாகனங்கள் இயக்க அனுமதிப்பது ஆகியவைதான் இப்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளாக உள்ளன. இந்த நிலையில்தான் ஜூன் 21-ஆம் தேதி முதல் நோய்தொற்று குறைவாக இருக்கக் கூடிய 27 மாவட்டங்களில் நகர பேருந்துகள் இயக்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

இந்த வாரம் பஸ்
இந்த வார இறுதிக்குள் பஸ் போக்குவரத்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக 50 சதவீதம் அளவுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பேருந்துகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லாது. அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் இயங்கும். மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இது பற்றி கருத்து கேட்டு இருப்பதாகவும் விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தளர்வுகள்
இதனால் வேலைக்கு செல்வோர் மருத்துவமனைகளுக்கு செல்வோர் வாடகை வாகனங்களை எதிர்பார்க்காமல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியும். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் பொதுப்போக்குவரத்து துவங்கப்பட வேண்டும், பள்ளிகள் மறுபடியும் துவங்கப்பட வேண்டும் இந்த சலுகைகள் கிடைக்க வேண்டுமென்றால் ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது ஊரடங்கு தளர்வு வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார். ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு பெரிய அளவுக்கு விதிமீறல்கள் இல்லை என்று தெரிவதால் நகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்கிறார்கள் அரசு துறை வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications