”அண்ணாமலை நிச்சயமாக யூதாஸ் தான்” இது அனைவருக்கும் தெரியும்.. சீனுக்குள் வந்த மனோ தங்கராஜ்!
சென்னை: நான் இயேசு அல்ல, அடித்தால் திருப்பி அடிப்பேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு, அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், இந்து மக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
ஆனால், பாஜக அனைத்து மதத்தினரின் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மதத்தினரும் சமம் என்று ஏற்கிறோம். தமிழ்நாட்டில் முதல்முதலாக விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் அண்ணா தான். அண்ணா வகுத்த பாதையில் இருந்து திமுக எவ்வளவு தூரம் விலகியுள்ளது என்பதற்கு இது சாட்சி.
200 கி.மீ. தூரம்.. சொகுசு காரில் 1 மாதம் தங்கி.. வாவா சுரேஷுக்கே டிமிக்கி கொடுத்த 10 அடி ராஜநாகம்
நான் இயேசு அல்ல
அதுமட்டுமல்லாமல் திமுக அரசு ஆக்ரோஷ அரசியலை கைவிட வேண்டும். ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் ஒன்றும் இயேசு கிடையாது. என்னை அடித்தால் நான் திரும்பி அடிப்பேன். ஆக்ரோஷமாக பதில் கொடுத்தால், இரு மடங்காக பதில் கொடுக்கப்படும்.
அண்ணாமலை பேட்டி
தேவை என்றால் நாளையே என் தோட்டத்தில் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வேன். முதலமைச்சராலும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனாலும் இதை செய்ய முடியுமா? அவர்களால் முடியாது. ஆனால் எனக்கு அந்த துணிவும் தைரியமும் இருக்கிறது ஆவேசமாக பேசி இருந்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறிவிட்டார். ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
திராவிட இயக்க அரசியல்
நான் நினைத்தால் நாளையே என்னுடைய கிராமத்திற்கு சென்று தோட்டத்தில் விவசாயம் செய்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவின் சனாதனதர்ம மனு நீதிபடி பார்த்தால் அண்ணாமலை குல தொழில் தான் செய்திருக்க முடியும். கல்வி உரிமை பெற்று கொடுத்து அண்ணாமலையை ஐபிஎஸ் ஆக்கியது தான் திராவிட இயக்க அரசியல்.
மனோ தங்கராஜ் ட்வீட்
மிகவும் அருவறுக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொது வாழ்வில் கண்ணியம், நாகரிகம் என்ற அனைத்து எல்லைகளையும் கடந்துள்ளார். தமிழக அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஒருவரின் வாகனத்தில் செருப்பு வீச சக கட்சிக்காரரைத் தூண்டியது மட்டுமின்றி, தற்போது அமைச்சர்கள் மீதும் சேற்றை வீசும் செயலில் ஈடுபட்டுள்ளார். இது பொது வாழ்வில் அவரது பண்பு, நேர்மை இல்லாமையைக் காட்டுவதோடு அவரது கட்சியின் அடிப்படை சிந்தனை செயல்முறை, நடத்தையையும் பிரதிபலிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.