எமனாக மாறும் இதய பிரச்சனை.. இந்தியாவில் அதிக மக்கள் உயிரிழக்க காரணமே இதுதானாம்.. ஷாக் தகவல்
சென்னை: நாடு முழுக்க ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகம் முக்கியமான ஒரு டேட்டாவை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் மொத்த இறப்புகளில் சுமார் 31% உயிரிழப்புகளுக்கு இதய நோய்களே காரணமாக இருப்பதாக அண்மையில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதய நோய்கள் எந்தளவுக்குப் பெரிய பிரச்சனையாக மாறுகிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
நமது நாட்டில் மாரடைப்பு மற்றும் அது சார்ந்த இதய நோய்ப் பாதிப்பு முன்பெல்லாம் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே இருந்தது. ஆனால், இப்போது இதய நோய்ப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளம் வயதினர், அவ்வளவு ஏன் குழந்தைகளுக்கும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. மாறி வரும் வாழ்க்கை முறையே இதற்குப் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதய நோய் ஆபத்து
இதற்கிடையே இதய நோய்கள் இந்தியாவில் எந்தளவுக்கு ஆபத்தானதாக மாறுகிறது என்பது குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு இதய நோய்களே முக்கிய காரணமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளன. மொத்த இறப்புகளில் சுமார் 31% உயிரிழப்புகளுக்கு இதய நோய்களே காரணமாக இருப்பதாக அண்மையில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மிக அதிகம்
இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகம் இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 2021- 2023 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட டேட்டாவை வைத்து இந்த ரிப்போர்ட் வெளியிட்டுள்ளன. அதில் தொற்று அல்லாத நோய்கள், அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவாத வகை நோய்களே நாட்டின் இறப்புகளுக்கு முதன்மைக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. 56.7% உயிரிழப்புகளுக்கு இதுவே காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சார்ந்த நோய்கள் இந்த லிஸ்டில் தான் வரும்
தொற்று நோய்கள், மகப்பேறு, பிரசவகால மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் ஏற்படும் இறப்புகள் மொத்த இறப்புகளில் 23.4%ஆக உள்ளன. கொரோனா பரவிய 2020-2022 காலகட்டத்தில் இந்த விகிதங்கள் முறையே 55.7% மற்றும் 24.0%ஆக இருந்தன. அதாவது இதய நோய்ப் பாதிப்புகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.
இதர காரணங்கள்
அதாவது ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 31% இதய நோய்களால் ஏற்படுகின்றன. அடுத்ததாக, சுவாசக்குழாய் நோய்ப் பாதிப்புகளால் 9.3% இறப்புகளுக்கும், புற்றுநோய் மற்றும் பிற கட்டிகளால் 6.4% இறப்புகளுக்கும், சுவாசக் கோளாறுகள் காரணமாக 5.7% இறப்புகளுக்கும் ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வயது வாரியாகவும் எங்கு எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதும் விளக்கப்பட்டுள்ளன. அதில் 30 வயதுக்கு மேற்பட்டோர் தான் இதயப் பாதிப்பு காரணமாக உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதேநேரம் 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களிடையே தற்கொலை என்பது உயிரிழப்பிற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது அதை இளம் தலைமுறையினர் சரியாகக் கையாள்வதில்லை என்பதையே இது காட்டுகிறது.
டேட்டா சொல்வது என்ன
தொடர்ந்து செரிமான நோய்கள், காய்ச்சல் மற்றும் எதிர்பாராத காயங்கள் போன்றவையும் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. செரிமான நோய்கள் 5.3% இறப்புகளுக்கும், மர்மக் காய்ச்சல் 4.9% இறப்புகளுக்கும், நீரிழிவு நோய் 3.5% இறப்புகளுக்கும், வாகன விபத்துகள் 3.7% இறப்புகளுக்கும் காரணமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications