சிலைக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் ஜெயில்.. சட்டம் கோரி ஹைகோர்டில் வழக்கு
சென்னை: சிலைக்கடத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும். வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிட கோரிய மனுவுக்கு தொல்லியல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புராதன மற்றும் கலை பொக்கிஷங்கள் பாதுகாப்பு சட்டத்தின் படி, சிலைக்கடத்தலில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது. அதே போல் அச்சட்டத்தின் 26வது பிரிவின் படி மத்திய அரசின் அதிகாரி மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவுகளில் திருத்தம் கொண்டு வர உத்தரவிடக் கோரி சென்னை சிஐடி நகரை ஸ்ரீதரன் என்பவர் வழக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
102 பேர் கைது
அந்த மனுவில், கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 531 சிலைக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், 2012 முதல் 2018 ம் ஆண்டு வரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 கைது செய்யப்பட்டு 1125 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
14 வருடம் தண்டனை
மேலும் இதுவரை சிலைக்கடத்தலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனையானது குறைவானது என்றும், 100 ஆண்டுகள் பழைமையான கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைக்களை கடத்துபவர்களுக்கான சிறை தண்டனையை குறைப்பட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் அல்லது அதிகப்பட்சமாக 14 ஆண்டுகள் வரை அதிகரிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
சட்டதிருத்தம் தேவை
மேலும் தொல்லியல் துறையில் போதுமான அதிகாரிகள் இல்லாத காரணத்தால் கடத்தப்பட்ட சிலைகளை பறிமுதல் செய்வது, வழக்குகள் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை ஆய்வாளர் அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரிகளுக்கு மேற்கொள்ள உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
மத்திய அரசுக்கு நோட்டீஸ்
இந்த வழக்கு இன்று நீதிபதிகள், சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு வரும் பிப்ரவரி மாதம் 5 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.