கொரோனா.. மக்களை முழுமையாக காக்க 'சிறப்பு செயலாற்று குழு' அமைக்க கோரி ஹைகோர்டில் வழக்கு
சென்னை: கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை முழுமையாக காப்பதற்காக சிறப்பு செயலாற்று குழு அமைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வழக்கறிஞருமான பட்டுக்கோட்டை என்.ராஜேந்திரன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவரது மனுவில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் தமிழக அரசு அமைத்த மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய வல்லுநர் குழுக்கள் முறையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதனால் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை சார்ந்த வல்லுநர்கள், விவசாய மற்றும் மீனம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு செயலாற்றல் குழுவை ((ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்)) அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு அனைத்து மருத்துவமனையிலும் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக சீனாவில் தனி மருத்துவமனை அமைக்கப்பட்டது போன்று மாவட்ட தலைநகரங்களில் மட்டும் கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மற்ற நோய்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கும், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டை மூலமாகவும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும், விவசாயக் கருவிகளை வாங்குவதற்கும் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டுமென்றும், அந்த நிதி உதவியை அந்த நிதியை சிறப்பு செயலாற்று குழுவின் மூலமாக பட்டுவாடா செய்ய வேண்டுமென்றும் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications